முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது,
இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வல்லுநர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா 2ஆம் அலையின்போது, மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது சுமார் 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பினார்.
மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. ஆனால், இதை முற்றிலுமாக மறுத்துள்ள காங்கிரஸ் மன்மோகன் சிங் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து அகில் இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பிரணவ் ஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து உண்மைக்குப் புறம்பாக பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. வழக்கமான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்படும்பட்சத்தில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியிடப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications