இலவசங்கள் வழங்க கூடாது என உத்தரவிட முடியாது- கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்ய இயலாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: இலவசங்களை வழங்கக் கூடாது என கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது; இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தேர்தல் காலங்களில் இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த பொதுநலன் வழக்கு. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் கடந்த 3-ந் தேதி விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, இலவசங்களை வழங்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பும் தங்களது கருத்துகளை ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவில், இலவசங்கள் என்பது ஏழைகளுக்கு உதவக் கூடியது. ஆகையால்தான் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இதனை நீதிமன்றத்தில் விவாதிக்க வேண்டிய நிலை வந்திருப்பது வருத்தம் தருகிறது. இது தொடர்பாக குழு அமைத்தால் மாநில அரசுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின் போது, இலவசங்களைக் கொடுக்க கூடாது என அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது. இலவசங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கலாம்.
இலவசங்களை அறிவிக்கின்றன என்பதற்காக அரசியல் கட்சிகளின் பதிவுகள ரத்து செய்ய முடியாது. அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வது ஜனநாயக விரோதமாகும். இலவசங்களுக்காக நிதி ஒதுக்கீடு; மக்கள் நலத் திட்டங்கள் என்பவை சமன் செய்யப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது என்பது சீரியசான விஷயம்தான் என கூறியது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications