"தேர்தல் காற்று எந்த பக்கம்!" விலகும் நிதிஷ்குமார், எகிறும் மம்தா.. உணர்த்தும் செய்தி தான் என்ன
டெல்லி: இந்தியா கூட்டணியில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் பீகாரில் ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்குத் திரும்ப உள்ளதாகத் தகவல்கள் பரவும் நிலையில், மற்றொரு பக்கம் மேற்கு வங்கத்திலும் பிரச்சினை தொடர்கிறது.
மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறார்.

மேற்கு வங்கம்: முன்னதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.. மே வங்கத்தில் லோக்சபா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்" என்று கூறியிருந்தார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய அடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் கார்கே மம்தாவுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மம்தா மற்றும் இந்தியா கூட்டணியின் நோக்கமும் ஒன்றுதான் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மேற்கு வங்கத்திலும் சரி வெளியிலும் பாஜகவைத் தோற்கடிப்பது தான் முதல் இலக்கு என்றார்.
என்ன பிரச்சினை: ராகுல் காந்தி மேற்கு வங்கத்தில் பாத யாத்திரை நடத்தும் நிலையில், இது தொடர்பாக தன்னிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்று மம்தா முன்பு கூறியிருந்தார். அதற்குப் பதிலாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு கார்கே மம்தாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றனர்.
கார்கே, ராகுல் என அனைத்து தலைவர்களும் மம்தா பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். திரிணாமுல் காங்கிரஸை இந்தியா கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் எந்தளவுக்கு ஆர்வமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ச்சியாகக் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது. மேற்கு வங்கத்தில் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை தோல்விக்குக் காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தான் காரணம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதில் நிலைமையை மேலும் மோசமாகவே ஆக்கியது.
பீகார் சிக்கல்: மேற்கு வங்கத்தில் இந்த நிலை என்றால் பீகாரிலும் பெரிய பிரச்சினை. இந்தியா கூட்டணி உருவாகவே முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் இப்போது மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கே அரசியல் களம் எப்படிச் செல்லும் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஆனால், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினால் அது கூட்டணிக்கே மிகப் பெரிய சிக்கலாக அமையும். இது காங்கிரஸ் கட்சிக்குமே நன்றாகத் தெரியும். ஏனென்றால், நிதிஷ்குமார் வெளியேறினால் இந்தியா கூட்டணியே கொள்கைக்கு முரணாக பாஜகவை வீழ்த்த உருவாக்கப்பட்டது என்ற பிரச்சாரத்தை பாஜகவால் எளிதாக முன்னெடுக்க முடியும்.
பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி இருந்த போதிலும், அவர்கள் சொந்த லாபத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததே கூட்டணி சிதறக் காரணமாக இருக்கிறது. காங்கிரஸ் தனது கட்சிக்கான கம்பேக்கை இலக்காக வைத்து இருந்தது. அதேநேரம் மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை விரிவாக்க முயன்றன. இதுவே அசாம், மேகாலயா, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சீட் பகிர்வில் சிக்கலை ஏற்படுத்தியது.
அனுப்பும் செய்தி என்ன: காங்கிரஸ் கட்சிக்குச் சமீபத்தில் ஏற்பட்ட தோல்வி இந்தி ஹார்ட்லேண்டில் அதைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நேரத்தில் நிதிஷ்குமாரும் வெளியேறினால் இந்தி ஹார்ட்லேண்டில் காங்கிரஸ் நிலைமை ரொம்பவே மோசமாக மாறும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதிஷ்குமார் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி கூட்டணியில் இருந்து வெளியேறுவது தேர்தல் காற்று எந்த பக்கம் வீசுகிறது என்பதற்கான அறிகுறி என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications