காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன.. தற்போது சிறப்பாக இயங்கி வருகின்றன: பிரதமர் மோடி
டெல்லி: "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே கொடுத்து வந்த வங்கி கடன்கள் தற்போது ஏழைகளுக்கும் கிடைக்கிறது" என நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று உரையாற்ற இருந்த நிலையில், அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் மோடி அவைக்கு வர பயந்துவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், இது குறித்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமரின் உரையின்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று தனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். அதனால்தான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன் எனக் கூறினார். இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி பேசுகையில், "உலக நாடுகளின் பிரச்சனைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலக பொருளாதாரத்தில் 2014-ல் 11-ஆம் இடத்தில் இருந்தோம்; இன்று 3-வது இடத்தில் உள்ளோம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எனது ஆட்சியில் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. சிறு விவசாயிகள் பற்றி முந்தைய அரசு கவலைப்பட்டது இல்லை. நமது இளைஞர்களின் உரிமைகளை பழங்குடியினர் பறித்துக்கொள்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கியிருந்தன. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது தங்களது பாக்கெட்டுகளை மட்டுமே நிரப்பி உள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் அதிகமாக இருந்தது. தற்போது வங்கிகள் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. 30 லட்சம் கோடி முத்ரா கடன் கொடுத்துள்ளோம்.
எனது ஆட்சியில் வங்கிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் 1%க்கும் கீழ் குறைந்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் வாராக் கடனில் மூழ்கி இருந்தன. தற்போது வங்கிகளின் லாபம் உச்சம் தொட்டிருக்கிறது" என பிரதமர் மோடி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications