ஜி20 உச்சி மாநாடு: ஜனாதிபதி அளித்த விருந்து.. ஒரே பஸ்சில் சென்ற "இந்தியா" கூட்டணி மம்தா-முக ஸ்டாலின்
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, ஜனாதிபதி அளித்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' யில் அங்கம் வகிக்கும் தலைவர்களான மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரே பேருந்தில் ஒன்றாக சென்றனர்.
ஜி20 தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும். அதன்படி, கடந்தாண்டு இந்தோனேசியாவில் இந்த மாநாடு நடந்த நிலையில், நடப்பாண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிரேசில் நாட்டிலும் அதற்கு அடுத்தாண்டு தென்னாப்பிரிக்காவிலும் நடக்க இருக்கிறது. அதன்படி, டெல்லியில் ஜி 20 மாநாடு நடக்கிறது.

இந்த மாநாடு இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜி 20 கூட்டத்தில் பிரகடனமும் வெளியானது. இதைஅனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி உணவு விருந்து அளித்தார். இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்க்கட்சிகளின் 'இந்தியா கூட்டணி' யில் அங்கம் வகிக்கும் தலைவர்களான மம்தாவும் முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரே பேருந்தில் ஒன்றாக சென்றனர். இது அரசியல் அரங்கிலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாநில முதல்வர்கள் அனைவரும் மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்த பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications