டோல்கேட்டில் PRESSக்கு இலவசம்? சிபிஐ எம்பி செல்வராஜ் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதின் கட்கரி உறுதி!
டெல்லி: டோல்கேட்களில் ஒரு சில வாகனங்களை தவிர அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், பத்திரிகையாளர்களுக்கும் இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாகை சிபிஐ எம்பி செல்வராஜ், நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கட்கரி கூறியுள்ளார்.
சுங்கச்சாவடிகள் தொடர்பான விவகாரங்கள் அவ்வப்போது பஞ்சாயத்தை கூட்டி வருகிறது. இந்தியாவில் வாகனங்கள் வாங்குபவர்கள் எல்லோருமே சாலை வரியை கட்டிதான் வாங்குகிறார்கள். அப்படி இருக்கும்போது, ஏன் சுங்கச்சாவடிகளை அமைத்து புதியதாக கட்டணங்களை வசூல் செய்கிறார்கள்? என்று சாமானிய மக்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தவிர, சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வும் அவ்வப்போது போராட்டங்களை தூண்டுவதாக இருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இங்கு 28 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் ஜூன் மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர் மாதம் ஒரு முறையும் என ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டுதல், இயக்குதல், திரும்ப ஒப்படைத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலைகளில் இன்னும் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. பல ஊர்களுக்கான சேவை சாலைகள் போடப்படவில்லை. இந்த நிலையில் முன்னர் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளன.
இதற்கு சிறந்த உதாரணம் சென்னை-வாலாஜா சாலை. இந்த சாலை பெங்களூர் வரை செல்கிறது. ஆனால், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வரை இன்றும் மேம்பாலங்களின் கட்டுமானப்பணிகள் முடிக்கப்படவில்லை. எனவே சாலை குண்டும் குழியுமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் இருக்கிறது. இருப்பினும் இங்கு டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாலைகளை சரியாக அமைக்காமல், கட்டணங்களை மட்டும் கறாராக வசூலிப்பது ஏன் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டோல்கேட் கட்டணத்தில் இருந்து சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், ராணுவத்தை சேர்ந்த டிரக்குகள், கார்கள், பிற வாகனங்கள், குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், தேசிய நெடுஞ்சாலைகளின் ஆய்வு, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசு அல்லது NHAI வாகனங்கள் போன்றவற்றிற்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த லிஸ்ட்டில் பத்திரிகையாளர்களின் வாகனங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், நாகப்பட்டினம் மக்களவை தொகுதி எம்பி வை.செல்வராஜ் இது தொடர்பாக, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கட்கரி தற்போது அறிவித்திருக்கிறார்.
இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்டால், பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதிலும், தனியார் ஊடகத்தின் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications