அதிர்ஷ்டம் இல்லை.. அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே நடந்தது.. தொடர்ந்து சரியும் இந்தியாவின் ஜிடிபி!
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
டெல்லி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி எச்சரித்தது போலவே இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி நோபல் பரிசை பெற்றார்.இவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரின் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இவர் இந்தியாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன்தான் ஜேஎன்யூ பல்கலையில் படித்தார். அமெரிக்காவில் தற்போது பொருளாதார ரீதியான ஆராய்ச்சிகளை இவர் செய்து வருகிறார்.
என்ன சொன்னார்
இந்த நிலையில் நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜி இந்திய பொருளாதாரம் குறித்து சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார். அபிஜித் பானர்ஜி தனது பேட்டியில் பொருளாதார மந்த நிலையை தற்போதுதான் அரசு கொஞ்சம் தீவிரமாக அணுக தொடங்கி உள்ளது. தற்காலிக தீர்வு வேண்டும் என்றால் நாம் உடனடியாக சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட கால தீர்விற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
என்ன ஆலோசனை
அரசு தற்போது இருக்கும் பொருளாதார மந்த நிலை குறித்து என்னிடம் அணுகாது. இது என்னுடைய பணியும் கிடையாது. ஆனால் என்னிடம் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து ஆலோசனை கேட்டால் நான் ஆலோசனை வழங்குவேன்.
மக்கள் எப்படி
மக்களிடம் பணம் இருக்க வேண்டும். மக்களிடம் பணம் புழங்க வேண்டும் இதுதான் என் ஆலோசனை. மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். மக்கள் இடையே எவ்வளவு பண புழக்கம் இருக்கிறதோ அவ்வளவு பொருளாதாரம் உயரும். நான் மக்கள் என்று சொல்வது ஏழைகளை. அவர்களிடம் பணம் இருக்க வேண்டும்.
திட்டம்
அப்போதுதான் பொருளாதாரம் சரியாகும். அரசு அறிவித்து இருக்கும் திட்டங்கள் மூலம் மக்களிடம் எதிர்காலத்தில் பணம் புழங்கும். ஆனால் நிகழ் காலத்தில் பொருளாதார பிரச்சனையை போக்க அது உதவாது. ஆனால் இதை எல்லாம் அரசு செய்வது கிடையாது என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மோசம்
இந்த நிலையில் அவர் சொன்னது போல மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. கார்ப்பரேட் சலுகைகள், ஆர்பிஐயிடம் பணம் பெற்றது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மக்களிடம் சரியாக பணத்தை கொண்டு சேர்க்கவில்லை. இதன் காரணமாக மக்களிடம் நாளுக்கு நாள் பணப்புழக்கம் குறைந்து கொண்டே வந்தது.
இதுதான் காரணம்
இதனால் அவர் சொன்னது போலவே தற்போது இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகி உள்ளது. அவர் எச்சரிக்கை விடுத்தது போலவே இந்தியாவின் இரண்டாம் காலாண்டு ஜிடிபியும் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன சரிவு
இந்தியாவின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது.