நேபாளத்தை போல ’ஜென் இசட்’ போராட்டம் இந்தியாவில் சாத்தியமா? ஓபனாக பேசிய அமித்ஷா
டெல்லி: நேபாளத்தை போல இந்தியாவில் ஜென் இசட் தலைமுறையினர் போராட்டத்திற்கு சாத்தியம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்தியா ஒன்றும் நேபாளம் இல்லை. நமது ஜனநாயகம் மிகவும் ஆழமானது எனவும் அமித்ஷா கூறியிருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். பீகார் தேர்தல், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அமித்ஷா பேசினார். குறிப்பாக நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற ஜென் Z போராட்டம் விவகாரம் குறித்தும் பேசினார்.

இந்தியா ஒன்றும் நேபாளம் இல்லை
அமித்ஷா பேசுகையில், "இந்தியாவில் அப்படியான ஒரு போராட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா ஒன்றும் நேபாளம் இல்லை. நமது ஜனநாயகம் மிகவும் ஆழமானது" என்றார். அதேபோல, பீகார் தேர்தல் குறித்து பேசிய அமித்ஷா கூறியதாவது: - பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெறும். 5-வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும்.
இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். நாட்டின் அரசியல் விழிப்புணர்வுள்ள மாநிலங்களில் ஒன்றாக பீகார் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்த வளர்ச்சியை மக்கள் பார்த்திருக்கிறார்கள். நீங்கள் எந்த ஒரு பீகார் இளைஞரிடமும் கேட்கலாம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கின் நிலை மேம்பட்டுள்ளதை அவர்கள் கூறுவார்கள்.
தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும்
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையின் கீழ்தான் தேசிய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. நிதிஷ்குமார்தான் முதல்வராக உள்ளார். முதல்வர் வேட்பாளர் விவகாரத்தைப் பொறுத்தவரை, அரசியல் அமைப்பு நடைமுறைகள் உள்ளன. எனவே, தேர்தலுக்கு பிறகு இது முடிவு செய்யப்படும்" என்றார்.
243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் வரும் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாபந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜென் Z போராட்டம்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஜென் Z எனப்படும் இளைய சமூகத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நேபாள அரசு சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து போராடத் தொடங்கிய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலைவர்களுக்கு எதிரானதாக இந்த போராட்டம் மாறியது.
போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்த போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், ராணுவம் கேட்டுக்கொண்டதால் பிரதமர் பதவியில் இருந்த ஷர்மா ஒலியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தற்போது அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்த ஜென் Z இளைஞர்களின் ஆதரவுடன் அந்நாட்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications