சவரன் தங்கம் விலை ரூ 30,000.. இப்படியே போனால் இனி தங்கத்தை பார்க்கலாம்.. வாங்க முடியாது போல!
டெல்லி: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 30 ஆயிரத்தை தாண்டியது.
இந்திய பொருளாதார மந்த நிலை, ரூபாய் நோட்டு சரிவு மற்றும் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 40 நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை பெற்று வருகிறது. அந்த வகையில் 40 நாட்களில் தங்கத்தின் விலை ரூ 3640 அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட தங்கத்தின் விலை நேற்றைய தினம் ரூ 128 அதிகரித்து ரூ. 29,744-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதிய உச்சம்
ஒரு கிராமுக்கு ரூ 16 அதிகரித்து ரூ 3,718-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 288 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ 30,120-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் தங்கம் ரூ 3,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிர்ச்சி
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 2.60 உயர்ந்து ரூ 55.20-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இரண்டே நாட்களில் 23 டாலர்கள் உயர்ந்து 1,543 டாலரானது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

நடுத்தர மக்கள்
தற்போது ஆவணி மாதம் முகூர்த்த மாதம் என்பதால் திருமணம் செய்வோர் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அரை பவுன் தாலிக் கூட வாங்க முடியாத நிலையில் திருமண நாட்களை குறித்துள்ள நடுத்தர மக்களும் கூலித் தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார மந்தநிலை
இப்படியே போனால் இனி தங்கத்தை ஏதோ அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக பார்ப்பது போல் பார்க்க வேண்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. தங்கத்தின் விலை உயர்வுக்கு பொருளாதாரத்தின் மந்த நிலையே காரணம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications