கொரோனா குறித்து தவறான கருத்து.. ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு நோட்டீஸ்!
டெல்லி: கொரோனா வைரஸை மத்திய அரசு கையாளுதல் குறித்து மோசமான முறையில் விமர்சித்த ட்வீட்டுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து பலரின் ட்வீட்டுகளும் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கொரோனாவால் மக்கள் படும் துயரங்களையும் அரசின் நடவடிக்கையின்மையையும் சுட்டிக் காட்டி ஏராளமான ட்வீட்டுகள் வலம் வருகின்றன. இந்த ட்வீட்டுகளை பிளாக் செய்யுமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
என் உறவினருக்கு ஆக்சிஜன், பிளாஸ்மா கிடைக்கலை- ட்விட்டரில் குமுறிய மாஜி பாஜக எம்.பி தருண் விஜய்
இதையடுத்து இந்திய சட்டத்திற்கு புறம்பான ட்வீட்டுகள் என குறிப்பிடப்பட்டு ட்வீட்டுகள் பிளாக் செய்யப்பட்டன. எம்பி ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலாய் காதக், நடிகர் வினீத் குமார் சிங், படத்தயாரிப்பாளர்கள் வினோத் காப்ரி, அவினாஷ் தாஸ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் போராட்டத்தின் போது பல ட்வீட்டுகள் முடக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ட்விட்டர் நிறுவனம் சிலரது ட்வீட்டுகளையும் ட்விட்டர் கணக்குகளையும் முடக்கியுள்ளது.