சீனா நன்கொடை சர்ச்சை.. சோனியா குடும்பம் நடத்தும் 3 அறக்கட்டளைகளை விசாரிக்க குழு.. மத்திய அரசு அதிரடி
டெல்லி: சோனியா காந்தி குடும்பத்தாரால் நடத்தப்படும் அறக்கட்டளைகள் பண மோசடி தடுப்பு சட்டம் (பி.எம்.எல்.ஏ), வருமான வரி சட்டம், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் போன்ற சட்டங்களை மீறியுள்ளதா என்பதை அறிய நடத்தப்பட உள்ள விசாரணையை ஒருங்கிணைக்க அமலாக்க இயக்குநரகத்தின் சிறப்பு இயக்குநர் தலைமையில் அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு.
சீனாவிலிருந்து ராஜிவ் காந்தி அறக்கட்டளை நன்கொடை பெற்றதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டிய நிலையில், இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் பிரச்சினை ஏற்பட்டு இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்த நிலையில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் சீனா தூதரகத்திடமிருந்து சோனியா குடும்பம் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நன்கொடை பெறப்பட்டதாக ஜே.பி.நட்டா குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இவை அனைத்தும் ஹவாலா பரிமாற்றமாக இருந்துள்ளது என்றும், இதற்கு சோனியா காந்தி பதில் அளிக்க வேண்டும் என்றும் நட்டா கோரியிருந்தார்.
ஜே.பி. நட்டாவின் குற்றச்சாட்டை மறுத்த காங்கிரஸ், சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும், சுனாமி நிவாரண நிதிக்காகவும் அளிக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தது.












Click it and Unblock the Notifications