முதலில் ஆளுநர் யார்? பணி என்ன தெரியுமா? சட்டசபை கூட்டம் செல்லுமா என ஏன் கவலை? வெளுத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாது என்பது ஆளுநர் பன்வார்லால் புரோஹித்துக்கு தொடர்பே இல்லாத விவகாரம்; பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லும்; பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்; ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் மாநில தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுவர் மட்டுமே என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபை கூட்டத் தொடர் செல்லாது என கடிதம் அனுப்பி இருந்தார். பஞ்சாப் மாநில ஆளுநரின் இத்தகைய போக்குக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பஞ்சாப் மாநில அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா பெஞ்ச் கூறியதாவது: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாதா? என ஆளுநர் அக்கறைப்பட வேண்டியது இல்லை. பஞ்சாப் சட்டசபை கூட்டத் தொடர் செல்லும்தான். பஞ்சாப் மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவெடுக்க வேண்டும். சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாது என ஆளுநர் ஆய்வு செய்வது ஜனநாயக சீர்குலைவுக்கு வழி வகுக்கும். சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாதா? என அரசியல் சாசனம் ஆளுநருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் தரவில்லை.
ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் ஒரு மாநிலத்தின் தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுகிறவர். அரசியல் சாசனம் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்துக்கு வழிகாட்டக் கூடியவர் அவ்வளவுதான். மாநில அரசும் ஆளுநரும் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடாது. ஒரு மாநில அரசாங்கம் தன்னிச்சையாக சட்டசபை கூட்டத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க முடியுமா? ஜனநாயகம் முறையாக செயல்பட ஆளுநர்களும் முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆளுநரை சட்டசபையில் முதல்வர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருப்பது சரியல்ல. சட்டசபையில் முதல்வர் பயன்படுத்துவதற்கான வார்த்தைகள் இருக்கின்றன. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் என்னவாகும்?. இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.












Click it and Unblock the Notifications