12 வகுப்பு மாணவர்களே.. 2 பெரிய மாற்றத்துக்கு ரெடியாக இருங்க.. வரப்போகும் புதிய கல்வி முறை
டெல்லி: 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அறிவியல், கலை அல்லது மனிதநேயம், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் எந்த படிப்பையும் தற்போது கலந்து படிக்கலாம். அந்த வழக்கத்தை ரத்து செய்ய வரைவு தேசிய பாடத்திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 12-ம் வகுப்புக்கு இரு பருவ தேர்வு முறை மீண்டும் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய பாடத்திட்டம், இதுவரை 4 தடவை மாற்றப்பட்டிருந்தது. கடைசியாக, 2005-ம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் தேசிய அளவில் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது

விரைவில், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய கல்வி திட்டத்தின்படி, புதிய பாட திட்டம் 2024-2025 கல்வி ஆண்டில் இருந்து இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 12-ம் வகுப்புக்கு இருபருவ தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா காலத்தில், ஒருமுறை நடவடிக்கையாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு இருபருவ தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு பழைய பாணியிலேயே ஆண்டு இறுதி தேர்வாக நடத்தப்பட்டது. இருப்பினும், வரைவு தேசிய பாடத்திட்டத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு மீண்டும் இருபருவ தேர்வு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. ஆனால் அதேசமயம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு இருபருவ தேர்வு முறை தேவையில்லை என்று வரைவு தேசிய பாடத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு தேசிய பாடத்திட்டத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இறுதி மதிப்பெண்ணுக்கு முந்தைய வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அறிவியல், கலை அல்லது மனிதநேயம், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் எந்த படிப்பையும் கலந்து படிக்கலாம். அந்த வழக்கத்தை ரத்து செய்யவும் வரைவு தேசிய பாடத்திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications