ரயில் விபத்து.. கடந்த 5 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட இன்சூரன்ஸ் பதிவாகவில்லை! - சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான அளவுக்கு ரயில் விபத்துக்கள் நடந்திருக்கின்றன. ஆனால் ஒருவருக்கு கூட இன்சூரன்ஸ் பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சமீப காலமாகவே ரயில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. ரயில்வே துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறை, தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக விபத்துகள் நடப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், ரயில் விபத்துக்களுக்கு மர்ம நபர்களின் நாச வேலைதான் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இப்படி இருக்கையில், ரயில் விபத்துகள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

indian railways su venkatesan

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "நான் நாடாளுமன்றத்தில் ரயில்வே விபத்துக்கள் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண் 429/ 27.11.2024) ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.

நிறைய கேள்விகள்

1.11.2019 இல் இருந்து 31.10.2024 வரை ஐந்து ஆண்டுகளில் எத்தனை ரயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் எத்தனை உயிர்கள் பலியாகி உள்ளன?, இணையவழி பயணச் சீட்டு பதிவில் எத்தனை பயணிகள் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தனர்?, இறந்த பயணிகளின் எத்தனை நியமனதாரர்கள் உரிமங்களை கோரியிருந்தனர்?, எவ்வளவு பேருக்கு இறப்பு உரிமம் வழங்கப்பட்டது?, உரிமம் வழங்கப்படாததற்கு காரணங்கள் என்ன?, ரயில் விபத்துக்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா?, அவற்றின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன ? என்ற நிறைய கேள்விகளை நான் எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலுக்கான தலைப்பே ரயில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு என்பதே ஆகும்.

மறைக்கிற உத்தி

எனது கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை அளிக்கிறது. பொதுவாக கேள்விகளை எழுப்பினால் ஒவ்வொரு கேள்விக்கும் தனியாக பதில் அளிப்பதே கேள்வியின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இருக்கும். இதற்கான வழிகாட்டல்களும் நாடாளுமன்ற ஆவணங்களில் உள்ளன. ஆனால் அமைச்சர் 7 கேள்விகளையும் இணைத்து ஒரே பதிலாக தந்துள்ளார்.

நான் 5 ஆண்டுகளுக்கு விவரங்கள் கேட்டால் அவர் இருபது ஆண்டுகளுக்கு விவரங்களை தந்துள்ளார். கூடுதல் விவரங்கள் தானே தந்துள்ளார் என்று நினைக்கலாம். ஆனால் அவரின் நோக்கம் காங்கிரஸ் காலத்தில் நடந்த விபத்துக்களை விட பாஜக காலத்தில் நடந்தேறி உள்ள விபத்துக்கள் குறைவு என்பதே.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பன்மடங்கு பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கும் போது இப்படி காலங்களை ஒப்பிடுவது பொறுப்பிலிருந்து தப்பிக்க உதவுமே தவிர பயணிகளின் நலனையும் உயிரையும் பாதுகாப்பதற்கு உதவாது. நவீன தொழில்நுட்ப மேம்பாட்டை பயன்படுத்தி விபத்துக்களை குறைப்பது, உயிர்களை பாதுகாப்பது என்பதில் ஒன்றிய அரசு தவறி இருக்கிறது என்பதை மறைப்பதற்கு தான் இப்படி கேட்காத விவரங்களையும் சேர்த்து அமைச்சர் தந்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு இறப்பு உரிமம் கூட

ஆனால் நான் கேட்ட விவரங்களை அவர் தரவில்லை என்பதுதான் உச்ச கட்டம். 2019 - 24 வரை எவ்வளவு உயிர் இழப்புகள், எவ்வளவு பேருக்கு காயங்கள் என்பது தனியாக தரப்படவில்லை. 2014 - 15 லிருந்து 2023 - 24 வரை 678 விபத்துக்கள் 748 மரணங்கள் 2087 பேருக்கு காயங்கள் என்று விவரங்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றுக்கான இன்சூரன்ஸ் உரிமங்களை 01.11.2019 லிருந்து 31.10.2024 வரை கோரி பதிவு செய்திருப்பவர்கள் 22 பேர் மட்டுமே, இறப்பு உரிமங்கள் பதிவு ஒன்று கூட செய்யப்படவில்லை என்று அமைச்சர் பதிலளித்துள்ளார். இன்சூரன்ஸ் பரவலாக்கல் பற்றி எல்லாம் வாய் கிழிய பேசுகிற அரசாங்கத்தின் லட்சணத்தை இந்த பதில் அம்பலப்படுத்துகிறது.

ஏன் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை. பயணிகள் நேரடியாக இணையத்தில் பாலிசி எடுத்துக் கொள்கிறார்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உரிம பட்டுவாடா செய்கின்றன என்று ஒற்றை வரியில் கடந்து சென்றுள்ளார். இதில் அரசுக்கு பொறுப்பு இல்லையா? இறந்த பயணிகளில் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்பதை பற்றிய தார்மீக உறுத்தல் கொஞ்சம் கூட இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றது.

விபத்துக்கள் பற்றிய விசாரணையின் விவரங்களும் பொதுவாக தரப்பட்டுள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொத்தாம் பொதுவாக "பொருத்தமான நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புக்காக என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, புதிய தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அது போதுமான அளவு உள்ளதா என்பதெல்லாம் இந்த பதிலில் இல்லை" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+