தமிழக பாஜகவினருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி… எம்ஜிஆர் பற்றி என்ன பேசினார்??
டெல்லி : மெகா கூட்டணியானது அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் புனிதமற்ற கூட்டணி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முனைப்பு காட்டி வருகின்றது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி உள்ளார்.

முதற்கட்டமாக உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் காணொலி மூலம் மாநிலவாரியாக பாஜக நிர்வாகிகளுடனும், பூத் ஏஜென்ட்டுகளுடனும், தொண்டர்களுடனும் அவர் உரையாற்றினார்.
அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான காணொலி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து நாட்டின் தென்மாநிலங்களில் பாஜகவிற்கு பலம் சேர்க்கும் வகையில், அதிக பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், மத்திய சென்னை, சென்னை வடக்கு, மதுரை, திருச்சி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜகவினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :
பாஜக-விற்கு எதிராக இணையும் மெகா கூட்டணி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் கூட்டணி, செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தனிப்பட்ட நலன்களுக்காக அமைக்கப்படும் புனிதமற்ற கூட்டணி என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரசின் அராஜகத்தை வீழ்த்துவதற்காகவே மறைந்த ஆந்திரா முன்னாள் முதல் மந்திரி எம்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் என்ற கட்சியை ஆரம்பித்தார். ஆனால், அக்கட்சியின் இப்போதைய தலைவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க துடிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரம் யாரையும் விட்டு வைத்ததில்லை. குறிப்பாக, மக்களின் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து எம்ஜிஆர் ஆட்சியை 1980-ம் ஆண்டு கலைத்த கட்சிதான் காங்கிரஸ் என்பதை மக்கள் உணரவேண்டும் என்று மோடி குறிப்பிட்டு பேசினார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications