குறைகிறது ஜிஎஸ்டி! மளிகை பொருட்கள், உடைகள் விலை குறைய போகுது.. மிடில் கிளாஸ் மக்களுக்கு நல்ல செய்தி
டெல்லி: மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் மிக முக்கியமான மாற்றத்தைச் செய்யவுள்ளது. 12% பிரிவில் இருக்கும் பல்வேறு பொருட்களுக்கான விலையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டது. நாடு முழுக்க எல்லா மாநிலங்களிலும் சீரான மறைமுக வரி முறையைக் கொண்டு வரவே மத்திய அரசு இந்த ஜிஎஸ்டி வரி முறையைக் கொண்டு வந்தது. ஜிஎஸ்டியில் பொருட்களை நீக்குவது சேர்ப்பது, வரியை அதிகரிப்பது குறைப்பது உள்ளிட்டவை குறித்த முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும்.

மத்திய அரசு ஆலோசனை
இதற்கிடையே நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தினருக்கு உதவும் வகையில், மத்திய அரசு ஜிஎஸ்டி அடுக்குகளை மறுசீரமைக்கத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12%லிருந்து 5% ஆகக் குறைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. மேலும், 12% வரி பிரிவையே முற்றிலுமாக நீக்குவது ஆலோசனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் சாதாரணக் குடிமக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பதால் மத்திய அரசு இதை ஆலோசித்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களே இந்தப் பிரிவில் அதிகம் இருப்பதால் இது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்தப் பொருட்களை 5% வரி பிரிவுக்கு மாற்றினால் அதன் விலை குறையும். இது பொதுமக்களுக்குப் பெரியளவில் உதவும்.
12% பிரிவு நீக்கம்
அதேபோல 12% அடுக்கை முழுவதுமாக நீக்கிவிடவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறதாம். 12% பிரிவை நீக்கிவிட்டு, அதிலுள்ள பொருட்கள் குறைந்த அல்லது அதிக வரி பிரிவுகளில் மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், தற்போது வரை இது குறித்து ஆலோசனைகள் மட்டுமே நடந்து வருகிறது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலின் வரவிருக்கும் 56வது கூட்டத்தில் தான் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். பொதுவாக கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு தேவை. இதனால் இந்த மாத இறுதியில் கூட்டம் நடைபெறலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதன் விலை குறையும்
இதன் மூலம் பேஸ்ட் மற்றும் பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர்கள் மற்றும் சமையலறை பாத்திரங்கள், எலக்ட்ரிக் அயன் பாக்ஸ்கள், கீசர்கள், சிறிய கொள்ளளவு வாஷிங் மெஷின்கள், சைக்கிள்கள், ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரையிலான காலணிகள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள் மற்றும் விவசாயக் கருவிகளின் விலை குறையலாம்.
ஏன் முக்கியம்
ஒருவேளை 12% வரி அடுக்கு பிரிவில் இறுதி முடிவு எடுக்கப்பட்டால் இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓராண்டில் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் நடக்கும் நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த உதவும்.
ஜிஎஸ்டி
மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தான், வரி விகிதங்களில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், 2017 இல் மறைமுக வரி அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஜிஎஸ்டி விகிதங்களில் செய்யப்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக இது இருக்கும்.
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம், பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக இது வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பின் மூலம் வரி செலுத்துதல் எளிமையாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications