ஜிஎஸ்டி வரி: நிவாரணம் கொடுக்காமல் காயப்படுத்துறோம்.. மத்திய அரசை தாக்கிய “பாஜக எம்பி!”
டெல்லி: மத்திய அரசு சார்பில் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீது 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை பாஜகவின் எம்பி வருண் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்தியில் இத்தகைய வரிவிதிப்பு நடுத்தர குடும்பம், இளைஞர்களை பாதிக்கும் எனவும், நிவாரணம் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோதும் காயப்படுத்துகிறோம் எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் இறுதியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டம் சண்டிகரில் துவங்கி 2 நாட்கள் நடந்தது.
இதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

5 சதவீத ஜிஎஸ்டி வரி
இந்த கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 25 கிலோவிற்கு குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தேன், உலர்ந்த காய்கறிகள், கோதுமை மாவு, தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் அரிசி வியாபாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு இதனை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

விலை உயர வாய்ப்பு
இதனால் அந்த பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் எனவும், காஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரித்தும் இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட் எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாஜக எம்பி விமர்சனம்
இந்நிலையில் தான் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை பாஜகவின் எம்பி வருண் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பால், தயிர், வெண்ணெய், அரிசி, பருப்பு, ரொட்டி போன்ற பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது.

காயப்படுத்துகிறோம்
நாட்டில் சாதனை படைக்கும் அளவில் வேலையில்லா திண்டாட்டத்துக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு என்பது நடுத்தர குடும்பங்களை குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் இளைஞர்களை பாதிக்கும். 'நிவாரணம்' கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது நாம் 'காயப்படுத்துகிறோம்'' என விமர்சனம் செய்துள்ளார்.

யார் இந்த வருண் காந்தி?
உத்தர பிரதேச மாநிலத்தின் பிலிபிட் தொகுதி எம்பியாக வருண் காந்தி உள்ளார். இவர் இந்திரா காந்தியின் பேரன் ஆவார். அதாவது இவர் சஞ்சய் காந்தி-மேனகா காந்தியின் மகன் ஆவார். முன்னதாக வருண் காந்தி அக்னிபாத் திட்டத்தையும் விமர்சனம் செய்து இருந்தார். அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லாவிட்டால் மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம் என அவர் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications