குஜராத் தேர்தல்: இன்று பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு? 25% சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு நோ சீட்?
டெல்லி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் தொடர்பாக டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழு புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தியது.
குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8-ல் வெளியாகிறது.
குஜராத்தில் ஆளும் பாஜக 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவதில் முனைப்பாக உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி களத்தில் உள்ளன. ஆனாலும் பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் பாஜகவே 7-வது முறையாக வெல்லும் என கணித்து வருகின்றன.

திடீர் முடிவு
இந்நிலையில் பாஜகவின் 182 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய ரூபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல் ஆகியோர் தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மேலிடத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

டெல்லி ஆலோசனை
இந்நிலையில் பாஜகவின் குஜராத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. பாஜகவின் தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு, வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இதில் பிரதமர் மோடி, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு ஆப்பு?
பாஜகவின் தேர்தல் குழு கூட்டத்தில் குஜராத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகம், பிரசார யுக்தி குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாஜகவின் சிட்டிங் எம்.எல்.ஏக்களில் 25% பேருக்கு அனேகமாக சீட் கிடைக்காது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸை விட்டு பாஜகவை நம்பி வந்த ஹர்திக் படேல், ரவீந்தர ஜடேஜா மனைவி உள்ளிட்ட பலருக்கு சீட் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதிருப்தி வேட்பாளர்கள்
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டது. அவர்கள் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவதால் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல் குஜராத்தில் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதால் அது தொடர்பாகவும் மத்திய தேர்தல் குழு ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications