என்ஜின் ஃபெயில்யருக்கு வாய்ப்பு இல்லை! குஜராத் விமான விபத்துக்கு காரணம் என்ன? தீவிரமடையும் விசாரணை
அகமதாபாத்: குஜராத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு என்ஜின் செயலிழப்பு காரணமாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் 'AI 171', 8 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியது. 242 பேரை ஏற்றிக்கொண்டு ரன்வே 23லிருந்து புறப்பட்ட இந்த விமானம், விமான நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள மேகனி நகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

இதற்கு என்ஜின் ஃபெய்லியர் காரணமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், நிபுணர்கள் இதை மறுத்துள்ளனர். அதாவது, "விபத்தில் சிக்கிய விமானத்தில் பயன்படுத்தப்பட்டது 'GE GEnx' வகை என்ஜினாகும். வணிக விமானங்களுக்கு என பிரத்யேகமாக இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முந்தைய மாடலை விட இது, 15% வரை எரிபொருளை சேமிக்கும். இது கார்பன் ஃபைபர் கலவையால் உருவாக்கப்பட்டிருப்பதால் எடையும் குறைவு. எனவே போயிங் 787 மற்றும் 747-8 போன்ற நவீன விமானங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.
மற்ற என்ஜின்களை காட்டிலும் இது மிகுந்த நம்பகத்தன்மை கொண்டதாகும். எனவே ஃபெயிலியர் ஆவதற்கான வாய்ப்பே இல்லை. விமானியின் தவறு, பறவை மோதல், கட்டுப்பாட்டு அமைப்பு செயலிழப்பு, தொழில்நுட்ப கோளாறு போன்றவை விபத்துக்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
தற்போது விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விமானிகள் பேசிய கடைசி வார்த்தைகள் என்ன? என்பது தெரிய வரும். விபத்துக்கான காரணம் குறித்து போயிங் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று விமான போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 11 சிறுவர்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 242 பயணிகள் இருந்தனர். 230 பேரில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டை சேர்நதவர், 7 பேர் போர்த்துக்கீசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்த பிரதமர் நரேந்திர மோடி தனது x பதிவில் தெரிவித்திருப்பதாவது, "அகதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைத்திருக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications