ஜி ஜின்பிங்குடன் கைக்குலுக்கிய மோடி.. உற்று கவனித்து பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்.. பின்னணி
டெல்லி: ‛‛கல்வான் பள்ளத்தாக்கில் நம் ராணுவ வீரர்களை சீனா கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு உதவியது. ஆனால் இப்போது பிரதமர் மோடி புன்னகைத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சந்தித்து கைக்குலுக்கி உள்ளார்'' என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சீனாவுக்கு சென்றார். .சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டு நாளையுடன் முடிவடைகிறது. இந்த மாநாட்டுக்காக பிரதமர் மோடி நேற்று ஜப்பானில் இருந்து நேரடியாக சீனா சென்றார்.

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை வரை பிரதமர் மோடி அங்கு இருப்பார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியும், ஜி ஜின்பிங்கும் கைக்குலுக்கி கொண்டனர். மேலும் இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு கண்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர். மேலும் இருநாடுகளும் பிரச்சனையின்றி சேர்ந்து செயல்பட வேண்டும் என்று மோடி, ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நமது 20 துணிச்சலான வீரர்களின் உயிரைப் பறித்தது. ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்தது. அதுமட்டுமின்றி சீனா, பாகிஸ்தானுக்கு நேரடியாக அப்டேட்டுகளை வழங்கியது.
சீனாவின் இந்த மோசமான செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக நரேந்திர மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் இப்போது அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் புன்னகைத்து கைக்குலுக்கி உள்ளார்'' என விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications