கவலைப்படாதீங்க.. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்.. நம்பிக்கை கொடுக்கும் ஹர்ஷ்வர்தன்!
டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபமெடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா தற்போது 60,000-க்கும் மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது.
நாட்டில் மகாராஷ்டிரா, கேரளா , தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் முன்பு அடங்கி இருந்த கொரோனா தற்போது ஆட்டம் காட்டி வருகிறது.

மக்களுக்கு தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்ததாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மக்கள் ஏற்றுக் கொண்டனர்
வருகிற ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளன. இந்த நிலையில் கூடுதலானோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையியில் கூறிருப்பதாவது:-மக்கள் 'மேட் இன் இந்தியா "தடுப்பூசிகளை ஏற்றுக்கொண்டனர், இந்த உற்சாகம் மற்றும் நம்பிக்கையின் காரணமாக, கடைசி ஒரு கோடி தடுப்பூசிகளை நான்கு நாட்களுக்குள் நாம் கடந்துவிட்டோம்.

இந்தியா சிறந்த உதாரணம்
தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக மத்திய அரசு நேரக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, மக்கள் தற்போது இந்தியா முழுவதும் தங்கள் வசதிக்கு ஏற்ப தடுப்பூசிகளை பெற முடியும். இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மக்களையும் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு திட்டத்தை அடைய கூட்டாட்சி அமைப்பு எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு தடுப்பூசி திட்டம் சிறந்த உதாரணமாகும்.

உலக நாடுகள் அந்தஸ்து உயர்வு
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக உயர்த்தியது மட்டுமல்லாமல், உலக நாடுகளின் பார்வையில் ஒரு உண்மையான தலைவராக இந்தியாவின் அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.












Click it and Unblock the Notifications