அதிர்ச்சி.. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா.. என்னாச்சு? பாரத் பயோடெக் விளக்கம்
டெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின், கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட பரிசோதனையில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியானா, சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி, தற்போது 3வது கட்ட டிரையலில் உள்ளது. மொத்தம் 25 வேறுபட்ட பகுதிகளில், 26000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
3வது கட்ட டிரையல் ஆரம்பித்தபோது, ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், தனக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கோவாக்சின் தடுப்பு மருந்து போட்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
அமைச்சருக்கு பாசிட்டிவ்
தடுப்பூசி பரிசோதனையில், அமைச்சர் ஒருவர் பங்கெடுத்துக் கொண்டது இதுதான் முதல் முறை என்பதால் பரபரப்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இன்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இதன் காரணமாக, அம்பாலாவிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் நெருக்கமாக பழகியவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அனில் தெரிவித்துள்ளார்.
பாரத்பயோடெக் விளக்கம்
இதனிடையே, பாரத்பயோடெக் நிறுவனம், ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த தடுப்பூசி 2 டோஸ் கொண்டது என்றும், அமைச்சர் முதல் டோஸ் மட்டுமே போட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 28 நாட்கள் இடைவெளியில், தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், 14 நாட்கள் ஆன பிறகுதான், உடலில் ஆன்டிபாடி உற்பத்தி செய்யப்படுவது தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2 டோஸ் அவசியம்
முதல் டோஸ் போட்டு 14 நாட்கள் ஆகவில்லை என்பதால், அமைச்சருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என்பது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் விளக்கமாக உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் பரிசோதனைகளை அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 18 நாடுகளில் டிரையல்களை நடத்தியுள்ளது. 20 வருடங்களாக தடுப்பூசி தயாரிப்பில் பெயர் பெற்ற நிறுவனம் இதுவாகும். பாரத் பயோடெக் 80 நாடுகளுக்கு 4 பில்லியன் டோஸ்களை சப்ளை செய்துள்ளது. பாதுகாப்புக்காக சிறந்த நிறுவனம் என பெயர் எடுத்ததாகும். கடந்த வாரம், ஹைதராபாத் சென்ற பிரதமர் மோடி, கோவாக்சின் மருந்து உற்பத்தியை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.