பிறப்பிலும் ஒட்டாத இந்தி! 1959க்கான குழந்தை நல மைய அட்டையை வெளியிட்டு.. விளாசிய சு வெங்கடேசன் எம்பி
மதுரை: ‛‛இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை'' எனக்கூறி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது மொழிகளுடன் 1959ல் வழங்கப்பட்ட சென்னை குழந்தை நல மைய பிரசவ முன் கவனிப்பு பதிவு அட்டையை மதுரை எம்பி சு வெங்கடேசன் வெளியிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்துக்கு இந்தி மொழிக்கு திராவிட கட்சிகள் காலம் காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழகம், கர்நாடகம், மட்டுமின்றி இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் தான் மத்திய அரசு இந்தி திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமித்ஷாவின் விருப்பம்
இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம். இவர் ‛‛இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக கொண்டு வர வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்'' என நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டி கூட்டத்தில் விருப்பம் தெரிவித்தார். இதுதான் தற்போது பற்றி எரிகிறது.

கிளம்பிய எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் முதல் பாஜக தவிர ஏறக்குறைய அனைத்து கட்சியினரும் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்தியை எதிர்க்கும் கட்சியினருக்கும், பாஜகவினருக்கு இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

பிறப்பிலும் ஒட்டாத இந்தி
இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் டுவிட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில், ‛‛ஒன்றிய அரசின் கவனத்துக்கு... இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். 1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, உருது உள்ளன. இந்தி இல்லை. எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை'' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக 1959ல் வழங்கப்பட்ட பிரசவ முன் கவனிப்பு பதிவுக்கான மஞ்சள் நிற அட்டையையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அரியணையில் யார்?
முன்னதாக சில நாட்களுக்கும் முன்பும் சு வெங்கடேசன் இந்திக்கு எதிர்ப்பு தொடர்பாக பதிவிட்டு இருந்தார். அதில் ‛‛அரியனைணயில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே தான். இந்தியை தவிர பிற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுவே மத்திய அரசின் தந்திரமாக உள்ளது. இந்த தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள் '' என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications