HMPV வைரஸ் பாதிப்பு.. விழிப்புடன் இருந்தால் போதுமானது! அச்சப்பட வேண்டாம்
டெல்லி: சீனாவில் பரவ தொடங்கியுள்ள HMPV வைரஸ் பாதிப்பு, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலரும் அச்சமடைந்து வருகின்றனர். ஆனால் இந்த தொற்று சாதாரண பருவகால காய்ச்சல் போன்றதுதான் என்றும், அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
HMPV வைரஸ் பாதிப்பு என்றால் என்ன?: கொரோனா தொற்று போல இதுவும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலரும் பயந்து வருகின்றனர். காரணம் HMPV வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இந்தியாவில் இதே வைரஸ் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இது ஒரு பருவகால நோய் மட்டுமே என்றும் மருத்துவர்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே போதும், அச்சப்பட தேவையில்லை என்று கூறுகின்றனர்.

எப்படி பரவும்?: கொரோனா தொற்றை போல இதுவும் சுவாசம் சார்ந்த ஒரு நோய் தொற்றுதான். இருமல், தும்மல் மற்றும் உமிழ்நீர் மூலம் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவுகிறது. அறிகுறிகளாக சளி, காய்ச்சல், தலைவலி போன்றவை இருக்கும். குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று சீக்கிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சீனாவில் நடப்பது என்ன?: சோஷியல் மீடியாக்களில் வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்துவிட்டு, சீனாவில் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது என்றும் பயந்து வருகிறார்கள். உண்மையில் கடந்த 2023ஐ விட 2024ல் இந்த தொற்று பாதிப்பு குறைந்திருக்கிறது. எனவே சோஷியல் மீடியாக்களில் வரும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை கண்டு அஞ்ச வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக சுகாதார மையம்(WHO) என்ன சொல்கிறது?: பொதுவாக சர்வதேச அளவில் ஏற்படும் தொற்று பாதிப்புகள் குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை கொடுக்கும். கொரோனா தொற்று குறித்து WHO எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால், HMPV வைரஸ் தொற்று குறித்து அப்படியான எந்த எச்சரிக்கையையும் WHO கொடுக்கவில்லை. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமைப்பு (CDC) கூட இந்த பிரச்சனை குறித்து பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை. இந்திய சுகாதார நிபுணர்களும், இந்த பாதிப்பு பருவகால காய்ச்சல் போன்றதுதான் என்று கூறியிருக்கின்றனர்.
அதிக பாதிப்புக்கு என்ன காரணம்?: சீனாவில் வைரஸ் பரவல் குறைந்த அளவாக இருந்தாலும், எண்ணிக்கை பெரியதாக இருக்கிறதே என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு காரணம் சீதோஷ்ண நிலைதான். வெயில் காலங்களில் குறிப்பிட்ட வகை வைரஸ்கள் அதிகமாக பரவும். அதுபோல குளிர் மற்றும் மழை காலங்களில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். அதுபோலதான் சீனாவில் தற்போது குளிர் காலம் என்பதால், HMPV வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
எனவே HMPV வைரஸ் பாதிப்பு குறித்து பீதியடைய வேண்டாம். தொற்று பாதிப்பை தடுக்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது மூக்கு, கண், வாய் ஆகியவற்றை தொடுவதற்கு முன்னர் கைகளை நன்கு சுத்தப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா தொற்றுக்கும் HMPV வைரஸ் பாதிப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் ஒன்று கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications