மேகாலயா ஹனிமூன் ட்ரிப்பில் இந்தூர் ராஜாவை கொன்ற மனைவி சோனம்! காணாமல் போனதாக போட்டது நாடகம்
சில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு சென்றிருந்தபோது, கணவனை கூலிப்படையை ஏவி மனைவி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட மனைவி தற்போது காவல்துறையில் சரணடைந்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் இளைஞர் ராஜா ரகுவன்ஷி. இவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னர், சோனம் எனும் இளம் பெண்ணுடன் திருமணம் ஆனது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இவர்கள், மேகாலயா மாநிலத்திற்கு ஹனிமூனுக்கு சென்றிருக்கின்றனர். அப்போது இந்த ஜோடி திடீரென காணாமல் போயிருக்கிறது. இதனையடுத்து ராஜாவின் உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த ஜோடி காணாமல் போய், 16 நாட்களுக்கு பின்னர் கணவர் ராஜாவின் உடல் மட்டும் அருவியின் அடிப்பகுதியிலிருந்து கிடைக்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர் இறப்பதற்கு முன்னர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மிஸ்ஸிங் வழக்கை, கொலை வழக்காக மாற்றி, மனைவி சோனத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
ஆனால், மனைவி சோனத்தின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே இவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் தங்களது ஸ்டைலில் விசாரிக்க தொடங்கினர்.

இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது சோனம் அழைத்ததன் பேரில் 3 பேர் மேகாலயாவுக்கு வந்திருக்கின்றனர். 3 பேரில் 2 பேர் இந்தூரை சேர்ந்தவர்கள். ஒருவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர். இவர்கள் மூவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்திருக்கின்றனர். கொலையை மறைக்க, அருவியில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்ததைபோல ராஜாவின் உடலை செட்டப் செய்து வைத்திருக்கின்றனர். இதனையடுத்து இன்று உத்தரப் பிரதேசத்தின் நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் மனைவி சோனம் சரணடைந்துள்ளார்.
இது குறித்து மேகாலயா டிஜிபி இடாஷிஷா நோங்ராங் கூறுகையில், "கடந்த மாதம் திருமணம் முடித்த தம்பதியினர், மேகாலயாவில் உள்ள சோஹ்ராவில் பகுதிக்கு ஹனிமூன் வந்திருந்தனர். இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி உறவினர்கள் புகார் அளித்தனர்.
பொதுவாக இங்கு ஹனிமூன் வருபவர்கள் மலைப்பகுதியை சுற்றி பார்ப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இங்குள்ள மலைப்பகுதிகள் குழப்பமானது. எனவே மலையில் எங்காவது தொலைந்துவிட்டார்களோ? என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை, SDRF, NDRF, SOT மற்றும் drones மூலம் தேடுதல் பணியை தொடங்கினோம்.
கடந்த வாரம் திங்கட்கிழமை ராஜா ரகுவன்ஷியின் உடல் வெய் சாவ்டோங் நீர்வீழ்ச்சிக்கு கீழே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மீண்டும் தேடுகையில், அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பின்னர் ஓட்டலில் சிசிடிவி கேமராக்களில் கிடைத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு விசாரணை மேற்கொண்டதில் மூவரை கைது செய்தோம். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த படையை பயன்படுத்திதான் சோனம், ராஜாவை கொன்றிருக்கிறார். தற்போது சோனம் போலீசில் சரணடைந்துள்ளார்" என்று கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications