"அதிசயம்.." எமனுக்கே டாட்டா சொன்ன முதியவர்.. சாலையில் இருந்த அந்த குழி! போன உயிர் திரும்ப வந்தது
டெல்லி: ஹரியானா மாநிலத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 80 வயது முதியவர் ஒருவர் திடீரென உயிர்பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
நமது நாட்டில் இருக்கும் சாலைகளின் நிலை குறித்து நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பிரதான சாலைகளைத் தவிர பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகவே இருக்கும். அதில் பயணிப்பதே பெரும் போராட்டமாகவே இருக்கும்.

முறையான பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குக் காரணம். அதேநேரம் யாராவது பிரபலங்கள் வருகிறார்கள் என்றால் மட்டுமே அவசர அவசரமாக வந்து சாலையை ரெடி செய்வார்கள். நமது நாட்டில் எல்லா இடங்களிலும் இதே கதை தான் நடக்கும்.
ஹரியானா: இந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், அதன் காரணமாகவே கூட பல நேரங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இப்போது ஹரியானா மாநிலத்திலும் கிட்டத்தட்ட அதுபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. ஆனால், இதனால் அங்கே முதியவர் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா.. அங்கே என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஹரியானாவைச் சேர்ந்த 80 வயதான தர்ஷன் சிங் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து இறுதிச் சடங்கு செய்ய தர்ஷன் சிங்கின் உடல் பாட்டியாலாவிலிருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.. அவரது உடல் எடுத்து வரும் தகவல் கிடைத்ததும் அவரது வீட்டில் குவிந்த உறவினர்கள் துக்கத்தில் இருந்தனர். இறுதிச் சடங்கிற்குத் தேவையான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து வந்தது.
மீண்டும் வந்த இதயத் துடிப்பு: இது குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், "அப்போது ஆம்புலன்சில் அவரது பேரன் உடன் இருந்தான். அவன் தான் தாத்தா கை அசைவதைக் கவனித்துள்ளான். பிறகு இதயமும் துடிப்பை உணர்ந்த அவன், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் இது குறித்துக் கூறியுள்ளனர். இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே பரிசோதனை செய்த போது தான் அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது" என்றார்.
80 வயதான அந்த முதியவருக்கு ஏற்கனவே இதய பிரச்சினையும் இருந்துள்ளது. அந்த முதியவர் இப்போது கர்னாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட அவர் மீண்டும் உயிர் பிழைத்து வந்ததை அனைவரும் அதிசயமாகவே பார்க்கிறார்கள். அவர் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.
இறுதிச் சடங்கு: இது குறித்து தர்ஷன் சிங்கின் பேரன் பல்வான் சிங் கூறுகையில், "எனது தாத்தாவுக்குக் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு இருந்து வந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். நான்கு நாட்களாக அவரது தாத்தாவுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும், கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து வீட்டில் சொல்லி இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அந்த பள்ளம்: பந்தல் போட்டு இரங்கலுக்கு ஏற்பாடு செய்தோம். பொதுமக்களும் வர தொடங்கினார்கள். இருப்பினும், ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, அங்கே சாலையில் உள்ள அது ஒரு குழியில் ஆம்புலன்ஸ் பலமாக மோதியது.. அதன் பிறகே அவருக்கு இதயத் துடிப்பு மீண்டும் வந்தது. மூச்சுவிடவும் தொடங்கினார், இதையடுத்து அவரை அருகே உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்தோம்.
இது ஒரு அதிசயம், இப்போது என் தாத்தா விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூடியிருந்த அனைவரும் இப்போது அவர் நலம் பெறப் பிரார்த்தனை செய்கிறார்கள். இது கடவுளின் கிருபையாகும். அவர் நலம்பெறுவார் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications