நமீபியாவில் இருந்த வந்தது கர்ப்பிணி சிறுத்தை.. அழுத்தத்தால் கரு கலைந்தது! பகீர் தகவல்! நடந்தது என்ன
டெல்லி: நமீபியா காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று கருவுற்று இருந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு காரணங்களால் விலங்குகள் வாழும் பகுதிகள் தொடர்ந்து சுருங்கி வருகின்றன. இதனால் மனித மிருக மோதல்களும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக பல்வேறு விலங்குகளும் அழியும் தறுவாயில் உள்ளன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வனவிலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் உள்ளன என்றே சொல்லாம்.

சிறுத்தைகள்
இந்தியாவில் வாழ்ந்து அழிந்த விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. நாட்டின் கடைசி சிறுத்தை கடந்த 1949இல் சத்தீஸ்கர் கோரியா பூங்காவில் உயிரிழந்தது. அதன் பின்னர் சிறுத்தை இனம் நாட்டில் முற்றிலுமாக அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டில் சிறுத்தைகளை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக நமீபியா நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.

நமீபியா
அதன்படி ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் நமீபியா நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது. அவை மத்தியப் பிரதேசம் குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டது. இதனிடையே அப்படி நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைகளில் ஒன்றான ஆஷா குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

குழப்பம்
அதாவது நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் போது ஆஷா சிறுத்தை கர்ப்பமாக இருந்து உள்ளது. ஆனால் மன அழுத்தம் காரணமாகக் கருக் கலைந்திருக்கலாம் என சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட் (CCF) கூறுகிறது. கடந்த சில நாட்களாகவே ஆஷா சிறுத்தையின் கர்ப்பம் குறித்த தகவல்கள் வெளியாகி வந்தது. இப்போது தான் இந்த விவகாரத்தில் நமக்கு ஒரு தெளிவான முடிவு கிடைத்து உள்ளது.

கர்ப்பம்
ஆஷா சிறுத்தை நமீபியா காட்டில் பிடிக்கப்பட்ட போது, அதற்கு ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதில் சிறுத்தை உடலில் கரு இருந்துள்ளன. இருப்பினும், மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்து வந்த பின்னரும் கூட அதன் நிலைமை துல்லியமாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே மத்தியப் பிரதேச பூங்காவில் ஆஷே சிறுத்தைக்கு மட்டும் அதிக கவனம் அளிக்கப்பட்டுப் பார்த்துக் கொள்ளப்பட்டதாகச் சீட்டா கன்சர்வேஷன் ஃபண்ட் இயக்குநர் லாரி மார்க்கர் தெரிவித்தார்.

கரு கலைந்தது
இது குறித்து இயக்குநர் லாரி மார்க்கர் மேலும் கூறுகையில், "ஆஷா காடுகளில் இருந்து வந்து 100 நாட்கள் ஆகிறது. பொதுவாகச் சிறுத்தைகளின் கர்ப்ப காலம் என்பது வெறும் 93 நாட்கள் தான்.. இந்நேரம் அது குட்டிகளை ஈன்றிருக்க வேண்டும். எனவே, அதன் கரு கலைந்துவிட்டதாக நாம் கூறலாம். அதாவது இந்தியாவில் சிறுத்தைகள் பிறக்க நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்.

அழுத்தமே காரணம்
ஆஷா பிடிக்கப்பட்ட போது அவள் கர்ப்பமாக இருந்து இருக்கிறார். ஆனால், அது கற்ப காலத்தின் தொடக்கக் காலம். மன அழுத்தத்தின் காரணமாக அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம். சிறுத்தைகள் முதல்முறையாகக் கர்ப்பம் ஆகும் போது, அழுத்தத்தால் கரு கலைந்துவிடுவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வு தான். இதற்குக் குறிப்பிட்ட காரணத்தைச் சொல்ல முடியாது. நாங்கள் இப்போது அடுத்தகட்டமாகச் சிறுத்தைகளை ஒன்றாகப் பழக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications