‛‛3 பாயிண்ட்’’.. பாஜக ஏன் தேர்தலில் தொடர்ந்து ஜெயிக்கிறது தெரியுமா? பிரதமர் மோடியே சொன்ன ரகசியம்!
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
டெல்லி: சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து பாஜக கட்சி வெற்றி பெறுவது குறித்தும், பல மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்ந்து தக்கவைப்பது தொடர்பாக பலருக்கும் கேள்வி உள்ளது. மேலும் இதுதெரியாமல் பல எதிர்க்கட்சிகளும் திணறி வருகின்றன. குறிப்பாக பழம்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ், பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில் தான் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்தது.
இந்த ஆண்டு கடந்த மாதம் 3 மாநிலங்களில் தேர்தல் நடந்தது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த மாதம் வாக்குப்பதிவு நடந்த நிலையில் மார்ச் 2ல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

3 மாநில தேர்தல்
இதில் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு பாஜக, என்டிபிபி கட்சியுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது. அதேபோல் மேகாலயாவில் என்பிபி கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிலையில் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மீண்டும் என்பிபி கட்சிக்கு பாஜக ஆதரவு வழங்க உள்ளது. இதன்மூலம் மேகாலயாவிலும் பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைகிறது.

பாஜக வெற்றி எப்படி?
இந்நிலையில் தான் பாஜக மட்டும் எப்படி மீண்டும் மீண்டும் ஒரு மாநிலத்தில் ஆட்சியை அமைக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் கூட பாஜகவின் வியூகத்தை அறிந்து கொண்டு அவர்களை வீழ்த்த திட்டமிடுவதும், இறுதியில் எதிர்க்கட்சியினரின் திட்டம் கைக்கொடுக்காமல் போவதும் நடந்து வருகிறது.

பிரதமர் மோடி பேச்சு
இந்நிலையில் தான் பாஜக தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி? என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியே பதில் அளித்துள்ளார். மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து தேர்தல் முடிவுகள் வெளியான மார்ச் 2ல் வெளியான நிலையில் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்சியினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

3 முக்கிய காரணம்
நாம் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெறுவதால் சிலர்(எதிர்க்கட்சியினர்) கலக்கமடைந்துள்ளனர். நாம் மட்டும் எப்படி தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம் என யோசித்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தொடர்ந்து அரசியலில் வெற்றி பெற மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ‛திரிவேணி' என்பதாகும். அதாவது பாஜக அரசு மக்களுக்கு செய்த பணிகள், அரசாங்கம் பின்பற்றும் கலாசாரம், பாஜகவினரின் மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகிய 3 தான் முக்கிய காரணமாகும். இந்த 3 காரணங்கள் தான் பாஜகவின் வெற்றியின் பின்னால் உள்ளது.

பாஜகவின் உழைப்பு
தற்போதைய சூழலில் பல அரசியல்வாதிகள் அடுத்த தலைமுறையினரை பற்றி யோசிப்பது இல்லை. மாறாக அடுத்த தேர்தலை பற்றி நினைக்கிறார்கள். அதோடு அடுத்த நாள் தலைப்பு செய்தியாக செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வர வேண்டும் என்பதை மட்டுமே நினைக்கும் அரசியல்வாதிகள் உள்ள காலம் இப்போது வந்துவிட்டது . ஆனால் பாஜக கடினமான சவால்களை சமாளிக்க உழைத்துள்ளது. தற்போதைய 3 மாநில தேர்தல் முடிவுகள் என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை அடிக்கோடிட்டு காட்டுகிறது.'' என்றார்.












Click it and Unblock the Notifications