மான்வேட்டை: சல்மான் கானை தப்பிக்க வைத்ததே ஜெகதீப் தன்கர் தான் தெரியுமா? துணை ஜனாதிபதியின் மறுபக்கம்
டெல்லி: நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 21ம் தேதி திடீரென்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் ஜெகதீப் தன்கருக்கும், நடிகர் சல்மான் கானுக்கும் இடையேயான தொடர்பு பலருக்கும் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் பெரும் சர்ச்சையை கிளப்பிய மான் வேட்டை வழக்கில் சிக்கிய சல்மான் கானுக்கு வழக்கறிஞராக வாதாடி ஜாமீனில் அழைத்து வந்ததே ஜெகதீப் தன்கர் தான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இது உண்மை தான். இது எப்படி? எப்போது நடந்தது? என்று பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் தான் ராஜ்யசபா தலைவகராக ராஜ்யசபாவை வழிநடத்தினார். ஆனால் திடீரென்று அன்றைய தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.

தனது உடல்நலனை காரணம் காட்டி ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சல்மான் கான் மான் வேட்டை வழக்கு
இப்படியான சூழலில் தான் ஜெகதீப் தன்கர் குறித்த பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மான் வேட்டையாடியதாக கூறப்படும் வழக்கில் நடிகர் சல்மான் கானை ஜாமீனில் அழைத்து வந்ததோ ஜெகதீப் தன்கர் தானாம். அதாவது கடந்த 1998 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே கன்கானி கிராமத்தில் ‛ஹம் சாத் சாத் ஹைன்'என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த படப்பிடிப்பின்போது செப்டம்பர் மாதம் நடிகர் சல்மான் கான், சைஃப் அலி கான், சோனாலி பெண்ட்ரே, நீலம், தபு ஆகியோர் 2 மான்களை வேட்டையாடிய புகாரில் சிக்கினர். அவர்கள் வேட்டையாடியதாக கூறப்படும் Blackbucks என்ற வகையை சேர்ந்த மான் இந்திய வனவிலங்கு சட்டம் 1972ன் கீழ் அழிந்து வரும் இனத்தை சேர்ந்தது என்று வகைப்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தது. மேலும் அந்த மானை பிசோனி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஜெகதீப் தன்கர் ஆஜர்
இதுகுறித்து பிசோனி சமுதாயத்தினர் அளித்த புகாரில் நடிகர் சல்மான் கான் சர்ச்சையில் சிக்கினார். இது பெரும் பேசும் பேசுபொருளானது. ஜோத்பூர் போலீசார் சல்மான் கானை கைது செய்தனர். இந்த வழக்கில் சல்மான் கானுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி ஜாமீன் வாங்கி கொடுத்தது ஜெகதீப் தன்கர் தான்.
இதுபற்றி வழக்கறிஞர் பிரவீன் பல்வாடா என்பவர் உறுதி செய்துள்ளார். இவர் அந்த சமயத்தில் ஜெகதீப் தன்கரிடம் பயிற்சி வழக்கறிஞராக இருந்தார். இதுபற்றி பிரவீன் பல்வாடா கூறுகையில், ‛‛1998ல் ஜோத்பூர் போலீசார் சல்மான் கானை கைது செய்த வழக்கில் முதல் முதலில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஜெகதீப் தன்கர் தான். சல்மான் கான் மட்டுமின்றி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் வழங்கி கொடுத்தார். சல்மான் கானுக்காக ஒருமுறை மட்டுமே ஜெகதீப் தன்கர் ஆஜரானார். அதன்பிறகு அந்த வழக்கின் பிற விசாரணையில் ஜெகதீப் தன்கர் ஆஜராகவில்லை'' என்றார்.
நீடிக்கும் வழக்கு
சல்மான் கான் மான் வேட்டை வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானை குற்றவாளி என்று கூறி 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
இந்த வழக்கில் மற்ற நடிகர், நடிகைகளான சைஃப் அலி கான், சோனாலி பெண்ட்ரே, தபு, நீலம் உள்ளிட்டவர்கள் நிரபராதிகள் என்று நீதிமன்றம் கூறியது. இதைடுத்து சல்மான் கான் 2 இரவுகள் ஜோத்பூர் சிறையில் இருந்தார். அதன்பிறகு ஏப்ரல் 7 ம் தேதி அவருக்கு ஜோத்பூர் செசன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஜெகதீப் தன்கர் யார்?
தற்போது துணை ஜனாதிபதி பொறுப்பை ராஜினாமா செய்துள்ள ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அங்குள்ள ஜுன்ஜுனு மாவட்டம் கிதானா கிராமத்தை சேர்ந்தவர். இவர் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, எல்எல்பி படிப்பை முடித்தார். அதன்பிறகு வழக்கறிஞரானார். ராஜஸ்தான் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து கொண்டார். 1990 காலத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்தார்.
காங்கிரஸில் ஐக்கியம்
வழக்கறிஞர் தொழிலுக்கு நடுவே அவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார். ஜுன்ஜுனு லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 முதல் 1991 வரை எம்பியாக இருந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1991ல் காங்கிரஸ் சார்பில் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு கிசான்கார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993 முதல் 1998 வரை அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். 1998 ல் ஜுன்ஜுனு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பாஜகவில் ஐக்கியம்
அதன்பிறகு கடந்த 2003ம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தவர். பாஜக சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தார். அதன்பிறகு 2019ம் ஆண்டில் மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு வரை அவர் அந்த பொறுப்பில் இருந்தார். 2022ம் ஆண்டு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை இருந்த நிலையில் முன்கூட்டியே அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications