ரயில்களில் எத்தனை நாளைக்கு ஒருமுறை போர்வைகள் துவைக்கிறாங்க தெரியுமா? மத்திய அரசே கொடுத்த டேட்டா
டெல்லி: ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கப்படுகிறதா என்பது பற்றியும், பெட்ஷீட்களுக்கான சுகாதார தரநிலைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலை பார்க்கலாம்.
நமது நாட்டில் பெரும்பாலான மக்களின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில்வேதான் முக்கிய பங்காற்றுகிறது. உள்ளூர் பயணமாக இருந்தாலும் சரி.. தொலை தூர பயணமாக இருந்தாலும் சரி.. ரயில் இருந்தால் பயணிகள் முதலில் அதில் செல்லவே விரும்புவார்கள். ரயிலில் டிக்கெட் இல்லையென்றால் மட்டுமே பேருந்துகளை பற்றி யோசிப்பார்கள். இப்படி பயணிகளுடன் இரண்டறக்கலந்த ஒன்றாக ரயில்வே உள்ளது.

போர்வை: இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ரயில்களை பொறுத்தவரை பயணிகள் சொகுசாக பயணிக்க பல்வேறு சொகுசு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில், தொலை தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி கோச்களில் பயணிகளுக்கு போர்வை வழங்கப்படுகிறது.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை: இந்த போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கப்படும்?, சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்ற சந்தேகங்கள் பயணிகளுக்கு அடிக்கடி எழுகின்றன. ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும், போர்வையை பார்த்ததும் இந்த கேள்வி கண்டிப்பாக வந்து செல்லும்.. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் காங்கிரஸ் எம்பி குல்தீப் இந்தோரா கேள்வி ஒன்றை முன்வைத்தார்.
அமைச்சர் பதில்: அவர் வைத்த முன்வைத்த கேள்வியில், "அடிப்படை சுகாதார தரநிலையை ரயில்வே கடைப்பிடிக்க பயணிகள் கட்டணம் செலுத்தும் போது, ரயில்களில் கம்பளி போர்வைகள் மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கப்படுகிறதா? என்று கேட்டு இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
பிஐஎஸ் விதிகள் படி: ரயில்களில் தற்போது பயன்படுத்தப்படும் போர்வைகள் எளிதாக துவைக்கும் வகையிலும் பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சொகுசை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சுத்தமான துணிகளை வழங்குவதை உறுதி செய்ய பிஐஎஸ் விதிகளின் படி உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மாதம் ஒருமுறை: ரயில்களில் பயன்படுத்தும் லைனான் துணிகளை துவைக்க தரமான இயந்திரம் மற்றும் துவைப்பதற்கான வேதிப்பொருள் மற்றும் துணி துவைக்கும் நடைமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன. துவைக்கப்பட்ட பெட்ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய வொயிட்டோ மீட்டர்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெட்களில் ஷீட்களின் தரத்தை உறுதி செய்ய கூடுதல் பெட் விரிப்பும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் மாத்திற்கு ஒருமுறையாவது பெட்ஷீட்கள் துவைக்கப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications