ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு! பென்ஷன் பெற வாழ்வு சான்றிதழ் கட்டாயம்.. அதை சமர்ப்பிப்பது எப்படி
டெல்லி: ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் தந்தால் மட்டுமே ஓய்வூதியத்தைப் பெற முடியும்.
மத்திய அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஜீவன் பிரமான்ண் எனப்படும் வாழ்வு சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வழங்கும் முகமையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இது தான் ஓய்வூதியம் பெறுவோர் இன்னும் உள்ளனர் என்பதற்கான சான்றிதழ் ஆகும். இதை ஓய்வு பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

வாழ்வு சான்றிதழ்
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வாழ்வு சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேநேரம் 80 வயதைக் கடந்த மூத்த ஓய்வூதியதாரர்கள் இந்த சான்றிதழைச் சமர்ப்பிக்க மத்திய அரசு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.. அவர்கள் முன்கூட்டியே அதாவது அக்டோபர் 1 முதலே தங்கள் வாழ்வு சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம். இந்த வாழ்வு சான்றிதழைச் சமர்ப்பிக்கும் மத்திய அரசு பல்வேறு ஆப்ஷன்களை வழங்கி உள்ளது.

பல வழிகள்
ஓய்வூதியம் பெறுபவர், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் மாநில/ யூனியன் பிரதேச அரசு அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் ஏஜென்சிகளுக்கு நேரடியாகச் சென்று இந்த சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் அல்லது டிஜிட்டல் முறையிலும் கூட இந்த சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுபவர் நேரில் ஆஜராக விரும்பவில்லை என்றால் மத்திய அரசு கூறியுள்ள வடிவத்தில் இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரியின் கையெழுத்துடன் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன்
இந்த முறையைப் பின்பற்றி ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தால், அவர்கள் நேரில் ஆஜராகத் தேவையில்லை. அதேபோல வாழ்வு சான்றிதழை ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரமான் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, ஆதார் வழங்கும் UIDAI பரிந்துரைத்த சாதனங்கள் மூலம் பயோமெட்ரிக்ஸை வழங்க வேண்டும். ஜீவன் பிரமான் டிஜிட்டல் சான்றிதழுக்காக ஒரு நபரின் பயோமெட்ரிக்ஸை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சாதனங்களின் UIDAI வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

செயலி
வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதை மேலும் எளிதாக்கும் வகையில் ஐடி அமைச்சகம், அஞ்சல் துறையின் இந்திய அஞ்சல் கட்டண வங்கியுடன் இணைந்து கடந்த 2020இல் புதிய வசதியைக் கொண்டு வந்தது. இதன் மூலம் டிஜிட்டல் வாழு்வு சான்றிதழ்களைத் தபால்காரர் ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே சென்று பெற்றுக் கொள்வார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து போஸ்ட்இன்ஃபோ (Postinfo) செயலியை டவுன்லோட் செய்து இந்த ஆப்ஷனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி மூலம்
அதேபோல வீடுகளுக்கே சென்று வங்கி சேவை மற்றும் வங்கி மூலம் வாழ்வு சான்றிதழ்களை கலெக்ட் செய்யும் முறையும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சேவை 100 முக்கிய நகரங்களில் 12 பொதுத்துறை வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. DSB இணையதளத்தின் மூலமோ அல்லது 18001213721, 18001037188 என்ற கட்டணமில்லா எண்கள் தொடர்பு கொண்டே இந்த சேவையை அவர்கள் பெறலாம்.

ஃபோட்டோ மூலம்
இதை எல்லாம் விட மற்றொரு எளிய முறையும் கொண்டு வரப்பட்டு உள்ளது. உதய் (UIDAI) மென்பொருளின் முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் பென்ஷன் பெறலாம். இதன் மூலம் ஒருவர் தங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்து டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ்களைப் பெறலாம். இதற்கு ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஃபோட்டோ எடுத்தாலே போதும்.












Click it and Unblock the Notifications