பல கோடி ரூபாயை கொள்ளையடித்த ஜோடி.. "ஓசி" ஜூஸ் கொடுத்து பிடித்த போலீஸ்.! சினிமாவை மிஞ்சம் பரபரப்பு
டெல்லி: அசால்டாக பல கோடி ரூபாயைத் திருடிவிட்டு போலீசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு, நேபாளம் எஸ்கேப் ஆக முயன்ற ஜோடி ஓசி கூல்டிரிங்ஸால் சிக்கியுள்ளனர். அது எப்படி.. என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று புகுந்து துணிச்சலாகக் கொள்ளையடித்தனர். இது அந்த மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்போது கொள்ளையடித்தவர்களைத் தீவிரமாகத் தேடினர். இருப்பினும், போலீசார் கண்களில் எல்லாம் மண்ணை தூவி விட்டு இந்த ஜோடி அங்கிருந்து நேபாளத்திற்குச் செல்ல முயன்ற போது கடைசி நேரத்தில் சிக்கியுள்ளனர்.
கொள்ளை: கடந்த ஜூன் 10ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் மர்ம கும்பல் ஒன்று துணிச்சலாக உள்ளே புகுந்து கொள்ளையடித்துள்ளது. அங்கிருந்த காவலர்களை தங்களிடம் இருந்த ஆயுதங்களை வைத்து மிரட்டிய அந்த கும்பல், பின்னர் அங்கிருந்து ரூ. 8 கோடி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை ஆரம்பித்தனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளைக்கு மந்தீப் கவுர்- ஜஸ்விந்தர் சிங் பிளான் போட்டுக் கொடுத்து மாஸ்டர் மைண்டாக செயல்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்த நிலையில், அதற்குள் இந்த ஜோடி மாநிலத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.
புனித யாத்திரை: தங்கள் கொள்ளை சம்பவம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இருந்ததால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க மந்தீப் கவுரும் ஜஸ்விந்தர் சிங்கும் சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப்பிற்கு யாத்திரை சென்றுள்ளனர்.
அங்கிருந்து அப்படியே நேபாளத்திற்குச் செல்லவும் அந்த ஜோடி கிடைத்துள்ளது. இது குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. எனவே, விமானத்தில் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்த அந்த ஜோடி, ஹேம்குந்த் சாஹிப், கேதார்நாத் மற்றும் ஹரித்வார் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
சிக்கியது எப்படி: கொள்ளையர்கள் ஹேம்குந்த் சாஹிப்பில் இருப்பது போலீசாருக்கு தெரிந்திருந்தாலும், பக்தர்களின் கூட்டத்தின் மத்தியில் அவர்களை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அவர்களைப் பிடிக்கத் திட்டமிட்ட போலீசார், கோவிலுக்குள் இலவசமாக ஜூஸ் வழங்கும் இடத்தை செட்அப் செய்துள்ளனர். அங்கு வந்த பக்தர்களுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கியுள்ளனர்.
போலீசார் தங்களுக்குப் போட்ட ஸ்கெட்ச் குறித்துத் தெரியாமல், அந்த இடத்திற்கு வந்த ஜோடி இலவசமாக வழங்கிய ஜூஸை வாங்கியுள்ளனர். அதைக் குடிக்க மாஸ்கை கழற்றிய போது, அருகே இருந்த போலீசார் அவர்களை அடையாளம் கண்டு கொண்டனர். இருப்பினும், அப்போது போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அங்கே தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை பின்தொடர்ந்துள்ளனர்.
அதிரடி கைது: பிரார்த்தனை முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை, பின்தொடர்ந்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் சித்து தெரிவித்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து ஏற்கனவே 6 கோடி ரூபாயை மீட்டுவிட்டனர்.
லூதியான கொள்ளை சம்பவத்திற்குத் திட்டமிட்டு மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட ஜோடியை விரைவாக போலீசார் பிடித்ததாகப் பஞ்சாப் காவல்துறை தலைவர் கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார். பக்காவாக திட்டமிட்டுப் பிடித்த போலீசாரை பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications