45 வயதை கடந்தவர்கள் தடுப்பூசி பெறுவது எப்படி...எந்தெந்த நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி...இதை படிங்க!
டெல்லி: இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல், நீரிழிவு நோய் உள்பட பல்வேறு நோய்கள் அடங்கிய 45 வயது மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கோ வின் செயலியில் ஆதார் எண் மற்றும் விவரங்கள், புகைப்படம் மற்றும் மருத்துவர் கையொப்பமிட்ட மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் அதில் அருகில் உள்ள சுகாதார மையங்களில் தடுப்பூசி பெற பதிவு செய்யலாம்.
முதற்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.இதனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு
.அதுவும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. முதலில் கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் என்ற பெயரை பெற்ற கேரளாவில் தற்போது பாதிப்புகள் அதிகமாக உள்ளன. அங்கு தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் தினசரி பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் திரிபு வகை கொரோனா தொற்றுகள் உள்ளதாக மத்தியரசு எச்சரித்து உள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின், கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக நாடு முழுவதும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்ப்பட்ட நோய்வாய்பட்டவர்கள் ஆகியோருக்கு மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை நேற்று கூறியது.
தனியார் மருத்துவமனைகளில் போடப்படும்
10,000 அரசு சுகாதார மையங்களில் இந்த தடுப்பூசி இலவசமாகக் கிடைக்கும் என்றும் 20,000 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் தடுப்பூசி போடுவதற்கான செலவு அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் இதுவரை 1.07 கோடி தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி செலுத்தப் போகும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர்கள் மக்கள் தொகை 27 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே 10 கோடி பேர் இருப்பர்.
இந்த நோய்கள் உள்ளவர்கள்
45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்பட்டவர்கள் எந்தெந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் தடுப்பூசி வழங்கப்படும் என்ற பட்டியல் இன்னும் சில நாட்களில் அரசால் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆனால் இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல், நீரிழிவு நோய், புற்றுநோய், கடுமையான ஆஸ்துமா மற்றும் மனநலக் குறைபாடு அல்லது கற்றல் குறைபாடுகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெறலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. உடல் பருமனானவர்கள் மற்றும் உறுப்பு, எலும்பு மஜ்ஜை அல்லது ஸ்டெம் செல் மாற்றுத்திறனாளிகளும் இந்த பட்டியலில் அடங்குவர் என்று தகவல்கள் கூறுகின்றன.
படிவம் நிரப்ப வேண்டும்
மேற்கண்ட பட்டியலில் உள்ள நோய் ஒன்றின் கீழ் வருபவர்கள் தங்கள் மருத்துவ நிலையை உறுதிப்படுத்தும் ஒரு பக்க ஆம் / இல்லை படிவத்தை நிரப்ப வேண்டும், பின்னர் ஒரு பொது மருத்துவர் கையொப்பமிட்ட படிவத்தைப் பெற வேண்டும். பின்னர் அவர்கள் தடுப்பூசி பெற தடுப்பூசி மையத்தில் இந்த படிவத்தை வழங்க வேண்டும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோ வின் செயலியில் பதிவு
கொரோனா மற்றும் தடுப்பூசி தகவல்கள் அடங்கிய கோ வின் செயலியில் ஆதார் எண் மற்றும் விவரங்கள், புகைப்படம் மற்றும் மருத்துவர் கையொப்பமிட்ட மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.பின்னர் அவர்கள் அதில் அருகில் உள்ள சுகாதார மையங்களில் தடுப்பூசி பெற பதிவு செய்யலாம். தகுதி உள்ளவர்கள் வரிசைப்படுத்தப்பட்டு தடுப்பூசி வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. கோ வின் செயலியில் பதிவுகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் மருத்துவ சான்றிதழின் வடிவம் விரைவில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் . இது உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கும் எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன.