அபிநந்தன் விடுதலையின் பின்னணியில் அமெரிக்கா, செளதி அரேபியா, யுஏஇ.. !
இந்தியா விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து இருக்கிறது.
டெல்லி: இந்தியா விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்து இருக்கிறது.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறினார். அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று இம்ரான் கான் நேற்று கூறினார்.
ஆனால் இதற்கு பின் வெறும் அமைதி மட்டுமே காரணம் கிடையாது. உலக நாடுகள் பலவற்றின் அழுத்தமும் இதற்கு பின் இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் வரை இதற்காக அழுத்தம் கொடுத்துள்ளனர்.
|
என்ன சொன்னார்
நேற்று வியட்நாமில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், குறிப்பிடத்தகுந்த நல்ல செய்திகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் இருந்து வருகிறது. நான் இரண்டு நாடுகளுக்கு இடையில் பிரச்னையை சரி செய்ய பேசி வருகிறேன். நாங்கள் இவ்வளவு நாள், இந்த பிரச்சனையை தீர்க்க முயன்று வந்தோம். பல ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் நீடித்து வருகிறது. நாங்கள் அதை தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம், என்று குறிப்பிட்டார். அபிநந்தனை மையமாக வைத்துதான் டிரம்ப் இப்படி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி என்ன பேசியது
அதேபோல் சவூதி முடி இளவரசர் முகமது பின் சல்மானும் இது தொடர்பாக நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரானிடம் அவசரமாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அதோடு இன்று இது தொடர்பாக ''முக்கிய மெசேஜ்'' ஒன்றுடன் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜூபேர் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். அபிநந்தனை விடுவிக்க சல்மான் தொடர்ந்து பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரபு அமீரகம்
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை தொடங்கிய போதே, இம்ரான் கான், அரபு அமீரகத்தின் முடி இளவரசர் ஷேக் முகமது பின் சயாத்திடம் பேசினார். அதன்பின் அபிநந்தன் கைது செய்யப்பட்ட பின் ஷேக் தானாக கால் செய்து இம்ரானிடம் நிலைமை குறித்து பேசி உள்ளார். அபிநந்தனை விடுவிப்பதே சரியாக இருக்கும் என்று அவர் இம்ரானிடம் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

மூன்று நாடுகள்
இந்த நிலையில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் அளித்த அழுத்தத்தை அடுத்துதான் இம்ரான் கான் இந்த திடீர் முடிவிற்கு வந்தார் என்று கூறுகிறார்கள். ஆசியாவில் அணு ஆயுதம் பொருந்திய இரண்டு நாடுகள் அடித்துக் கொள்வது சரியாக இருக்காது, இந்த பிரச்சனையை தீர்க்க அபிநந்தனை விடுவிப்பதே சரியாக இருக்கும் என்று இந்த மூன்று நாடுகளும் ஆலோசனை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications