‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு எப்படி நடக்கும்? வெளியான பரபர தகவல்! பாஜகவுக்கு ‛செக்’.. ஆஹா
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு எப்படி நடக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இன்று ‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் இந்த முக்கிய தகவல் கசிந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஹாட்ரிக் முறையில் மத்தியில் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது. ஆனால் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

அதன்படி லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛‛இந்தியா'' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
சமீபத்தில் மும்பையில் ‛‛இந்தியா'' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தல் "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, வலைதள குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் இடம்பெற்றுள்ளன. இதில் முக்கிய குழு என்பது ‛‛இந்தியா'' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவாகும். இந்த குழு தான் கூட்டணியின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 13 பேர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் கேசி வேணுகோபால், திமுக சார்பில் டிஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா உத்தவ் அணியின் சஞ்சய் ராவத், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி சூர்வா இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி ராஜா உள்பட மொத்தம் 13 பேர் உள்ளனர்.
இந்நிலையில் தான் ‛‛இந்தியா'' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக எம்பி டிஆர் பாலு உள்பட ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
குறிப்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் ‛இந்தியா' கூட்டணி சார்பில் பொதுக்கூட்டங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் தொகுதி பங்கீட்டை குளறுபடிகள் இல்லாமல் அதேவேளையில் பாஜகவை வீழ்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பலமாக உள்ள கட்சிகளின் அடிப்படையிலும் தொகுதி பங்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஜகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதிகளில் செல்வாக்கு உள்ள கட்சியின் பிரதிநிதியை வேட்பாளராக நிறுத்தி மற்றவர்கள் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் அது ‛இந்தியா' கூட்டணிக்கான ஓட்டை அதிகரிக்கும். இது பாஜக வேட்பாளர்களுக்கு நிச்சயம் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications