கள்ளக்காதல்: 70 துண்டுகளாக மனைவியை வெட்டி டேராடூன் முழுவதும் வீசிய கணவர்.. பிரிட்ஜை திறந்தால்.. ?
டெல்லி: கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் தூவிய ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பொறியாளர், இவர் அனுபமா குலாட்டி என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து இருவரும் அமெரிக்காவில் குடியேறினார்கள். அவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அமெரிக்கா
இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். இந்த நிலையில் ராஜேஷ் கொல்கத்தாவில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது. அனுபமா அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்ததாக ராஜேஷுக்கு சந்தேகம் இருந்துள்ளது.
கள்ளக்காதல்
இதனால் தினந்தோறும் அவரது கள்ளக்காதலை அனுபமாவும் இவரது கள்ளக்காதலை ராஜேஷும் தட்டி கேட்டு சண்டை நடந்துள்ளது. ராஜேஷ் தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா போலீஸில் புகார் அளித்தார். மேலும் தனக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ 20 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ராஜேஷ் திட்டம்
இதனால் மனைவியை தீர்த்து கட்ட ராஜேஷ் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் மனைவியை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அனுபமா மயக்கமடைந்தார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக ராஜேஷ் நினைத்துள்ளார்.
கொலை செய்ய முடிவு
ஆனால் அவர் இறக்கவில்லை என்பதை அறிந்த ராஜேஷ் அனுபமாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். உடனே அனுபமாவின் மூக்கு மற்றும் வாயில் பஞ்சு அடைத்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி அனுபமா சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சடலத்தை மறைத்து வைப்பது எப்படி என தெரியாமல் ராஜேஷ் விழித்துள்ளார்.
70 துண்டுகள்
உடனே அனுபமாவின் உடலை 70 துண்டுகளாக வெட்டி அதனை கவரில் போட்டு 2 மாதங்களாக பல பகுதிகளுக்கு கொண்டு சென்று வீசியுள்ளார். குழந்தைகள் தனது தாய் குறித்து கேட்ட போது ஏதேதோ காரணங்களை கூறி ராஜேஷ் சமாளித்துள்ளார். இது அனுபமாவின் குடும்பத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன் போலீஸ்
இதனால் டேராடூன் போலீஸில் அனுபமாவின் சகோதரர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்த பிரிட்ஜை திறந்து பார்த்தனர். அதில் ஒரு கவரில் துண்டிக்கப்பட்ட கைகால்களும் ,மனித உடல் உறுப்புகளும் இருந்தன.
ரூ 15 லட்சம் அபராதம்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் ராஜேஷிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்த போது உண்மையை ஒப்புக் கொண்டார். மேலும் கல் வெட்டும் கிரைண்டர் இயந்திரத்தின் மூலம் உடலை வெட்டி கருப்பு நிற கவரில் வைத்து டீப் ஃப்ரீசரில் வைத்ததாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அனுபமா 2017 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.