அதானி பற்றி நான் பேசியபோது.. மோடி கண்களில் பயத்தை பார்த்தேன்.. ராகுல் காந்தி ஆவேச பேட்டி
டெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி தொடர்பாக நான் பேசிய போது, பிரதமர் நரேந்திர மோடியின் கண்களில் பயத்தை பார்த்தேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஜாதி தொடர்பாக அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்த தண்டனையை காரணம் காட்டி உடனடியாக மக்களவை உறுப்பினர் என்ற பதவியில் இருந்து ராகுல் காந்தி நேற்று நீக்கப்பட்டார். வயநாடு மக்களவை தொகுதி காலியாகிவிட்டதாக இன்று அறிவிப்பு வெளியிட்டது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் இன்று மதியம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு முதல் செய்தியாளர் சந்திப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக மக்களிடம் நியாயம் கேட்பேன்.. மக்களவையில் நான் அதானி நிறுவன முறைகேடு தொடர்பாக பேசியதால்தான் இந்த எதிர்வினைகளை சந்தித்து வருகிறேன். மறுபடியும் அதானி நிறுவனம் தொடர்பாக நான் பேசி விடக்கூடாது என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அதானி நிறுவனம் தொடர்பாக நான் லோக்சபாவில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் பயத்தை பார்த்தேன். கண்களில் பயம் தெரிந்தது. நான் பேசுவதை கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அதானி நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது..? இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications