‛‛காங்கிரஸ் நண்பர்களுக்கு நன்றி’’.. இன்னும் 20 ஆண்டு எங்க ஆட்சி தான்! ராஜ்யசபாவில் மோடி சூளுரை
டெல்லி: ‛‛காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கு நன்றி. நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி அமைப்போம். இதனை உறுதியாக நம்புகிறேன்'' என்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். இந்த முறை தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணி கட்சி எம்பிக்களுடன் உதவியுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் லோக்சபாவில் பதவியேற்றனர். அதன்பிறகு சபாநாயகர் தேர்தல் நடத்தி ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 27 ம் தேதி லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் மத்தியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அதன்பிறகு லோக்சபா நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில் உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி. தேர்தலில் நாட்டு மக்களின் விவேகமாகன அறிவு கூர்மையை நினைத்து கர்வம் ஏற்படுகிறது. எதிர்க்கட்சிகள் தோல்வியை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மதம் சார்ந்த அரசியலை மக்கள் நிராகரித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள எனது நண்பர்களுக்கு நன்றி. 1/3 அரசாங்கம் என்று காங்கிரஸ் கட்சியின் கூறியது சரிதான். நாங்கள் ஏற்கனவே 10 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி அமைப்போம். இதனை உறுதியாக நம்புகிறேன்.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிறது. நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட பஞ்சாயத்து தலைவர் ஆனது இல்லை. ஆனால் இன்று பல்வேறு பெரிய பெரிய பதவிகளில் இருந்து நாட்டுக்கு சேவையாற்றி வருகிறேன். இதற்கு காரணம் பாபாசாகேப் அம்பேத்கர் அளித்துள்ள அரசியலமைப்பு சட்டம் தான் காரணம்.
என்னை போல் பல சாதாரண மனிதர்கள் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தால் இங்கு வரலாம். மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில் நான் 3வது முறையாக இங்கு வந்திருக்கிறேன். அரசியல் சட்டம் என்பது பல்வேறு விதிகள் அடங்கிய நூல் அல்ல. அது நம்முடைய உணர்வு மற்றும் ஆன்மா. எந்த அரசாக இருந்தாலும் ஆட்சிக்கு அரசியலமைப்பு சட்டம் தான் வழிக்காட்டியாக இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு இந்திய அரசியல் சாசனமே பாதை அமைத்து கொடுத்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications