போஸ்டரில் தவிர்க்கப்பட்ட நேரு படம்.. இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சி கடும் கண்டனம்
டெல்லி: இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR) வெளியிட்ட 75ம் ஆண்டு இந்திய சுதந்திர கொண்டாட்ட போஸ்டரில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் படம் இடம்பெறாததற்கு காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை "அசாதி கா அம்ரித் மகோத்சவம்" என்ற பெயரில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் கொண்டாடி வருகிறது. இதற்காக அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்த போஸ்டரில் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.
அதேபோல் சாவக்கார் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்தில் முன்னிலை வகித்தவரும், இந்தியாவின் முதல் பிரதமருமான நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விளக்கம் அளித்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நேருவின் புகைப்படம் இடம்பெறாததை தேவையின்றி சர்ச்சையாக்குகிறார்கள்.

அவரின் புகைப்படம் அடுத்தடுத்த போஸ்டர்களில் இடம்பெறும். தற்போது ஒரே போஸ்டர் மட்டுமே வெளியாகி உள்ளது. இன்னும் பல போஸ்டர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டது. இந்த நிலையில் நேருவின் புகைப்படத்தை புறக்கணித்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீட்டில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட முதல் போஸ்டரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இல்லை. இதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம் சரியில்லை. அவர்களின் இந்த செயலையோ விளக்கத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது. ஐசிஎச்ஆரின் செயலாளர் முன்முடிவோடு, வெறுப்போடு செயல்பட்டு உள்ளார்.
இந்தியாவில் அறிவியல் தினத்தை சி.வி ராமனை நினைவு கூறாமல் கொண்டாட முடியுமா ? விமானத்தை கொண்டாடும் போது ரைட் சகோதரர்களை நினைவு கூறாமல் கொண்டாட முடியுமா? காரை கொண்டாடும் போது ஹென்ரிஃபோர்டை நினைவு கூறாமல் கொண்டாட முடியுமா?
அப்படி இருக்கும் போது இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நேருவை சுதந்திர கொண்டாட்டத்தில் எப்படி உங்களால் மறக்க முடிகிறது, என்று ப. சிதம்பரம் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications