ஐசிஎம்ஆர் விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ்.. டெல்லி கட்டடத்திற்கு கிருமிநாசினி தெளிப்பு
டெல்லி: அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த விஞ்ஞானிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து டெல்லியில் உள்ள அந்த கவுன்சிலுக்கான கட்டடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 1,91,041 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,413 பேர் பலியாகிவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் நோய் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமையகத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் கடந்த வாரம் மும்பையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதையடுத்து ஐசிஎம்ஆர் இயங்கும் கட்டடம் கிருமிநாசினி தெளிக்கப்படவுள்ளதால் நாளையும் நாளை மறுநாளும் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டோர் மட்டுமே அலுவலகத்திற்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications