இந்தியாவுடன் மோதினால்.. பாகிஸ்தான் பொருளாதாரம் அதளபாதாளத்துக்கு போய்விடும்.. பறந்துபோன வார்னிங்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இந்த மோதல் தொடரும் பட்சத்தில் இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு தான் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று குளோபல் ரேட்டிங் ஏஜென்ஸியான மூடிஸ் வார்னிங் செய்துள்ளார்.
பாகிஸ்தான்.. அண்டை நாடாக இருந்தாலும் கூட பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக விளங்கி வருகிறது. குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில் நம் நாட்டை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தான் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு முன்னதாக பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக முடக்க நம் நாடு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரதமர் மோடி முப்படையின் தளபதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடி கொடுக்கலாம் என்ற பரபரப்பு உள்ளது. இதனை சமாளிக்க பாகிஸ்தானும் தயாராகி வருகிறது.
அதன்படி பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் என்பது துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாகிஸ்தான் கப்பல்கள் நம் துறைமுகத்துக்குள் நுழையவும், பாகிஸ்தான் விமானங்கள் நம் வான்வெளி பரப்பை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் காரணமாக இருநாடுகளின் பொருளாதாரத்திலும் எத்தகைய தாக்கம் ஏற்படும்? என்பது பற்றி குளோபல் ரேட்டிங் ஏஜென்ஸியான மூடிஸ் (Moody's) முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் என்பது இந்தியாவை விட பாகிஸ்தானை தான் அதிகம் பாதிக்கும். இந்தியாவின் பொருளாதாரம் என்பது பெரிய இடையூகளை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் பாகிஸ்தானின் நிலைமை அப்படி கிடையாது.
இந்தியாவுக்கான முதலீடுகள், தனியார் பங்களிப்புகள் உள்ளிட்டவை நன்றாக இருக்கிறது. இது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும். ஆனால் பாகிஸ்தானுக்கு அது பிரச்சனையாக மாறலாம். இது பாகிஸ்தானின் வளர்ச்சியை பாதிக்கும். நீடித்த மோதல் என்பது பாகிஸ்தானின் நிதி ஒருங்கிணைப்பை கேள்விக்குறியாக்கும். இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த விஷயத்தில் இந்தியா Baa3 என மதிப்பிடப்படுகிறது. பாகிஸ்தான் Caa2 என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவுடன் மோதல் பலமாகும்போது பாகிஸ்தானுக்கு தான் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று குளோபல் ரேட்டிங் ஏஜென்ஸியான மூடிஸ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் தற்போது பொருளாதார நிலை என்பது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உலக வங்கி உள்பட பிற அமைப்புகள், நாடுகளிடம் இருந்து தான் பாகிஸ்தான் கடன் வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. மேலும் அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் பெரிய அளவில் இல்லை. இது காலியாகும் பட்சத்தில் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை பாகிஸ்தானால் வாங்க முடியாது. இப்படியான சூழலில் நம் நாட்டுடன் பாகிஸ்தான் மோதுகிறது. இது அந்த நாட்டுக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏற்கனவே நிபுணர்கள் எச்சரித்த நிலையில் இப்போது பொருளாதார ரீதியாக மூடிஸ் வார்னிங் கொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications