டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500.. காங்கிரஸின் சூப்பர் வாக்குறுதி
டெல்லி: டெல்லியில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டு முறை பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஆனால், மக்களவைத் தேர்தலில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜகவை பொருத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் சேர்ந்திருந்தன. ஆனாலும், சட்டப் பேரவைத் தேர்தல்களில் கூட்டணி அமைக்கப்படாமல் தனித்தனியாகத் தான் போட்டியிட்டன. இந்நிலையில், டெல்லியிலும் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாய் தேர்தலைக் களம் காணவுள்ளனர். இதனால், டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியினுடனான கூட்டணியை முறித்துள்ளது. இதனால், பாஜக கட்சியினர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மூன்று கட்சிகளுக்குமிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளதாவது: டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கும் திட்டமான பியாரி திதி யோஜனா திட்டம் அமல்படுத்தப்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்தது போலவே இந்த திட்டம் டெல்லியிலும் கடைப்பிடிக்கப்படும்
முதல் அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கான இத்திட்டம் செயல்படுத்தப்படும். பெண்களுக்கு நிதி சார்ந்த அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். டெல்லியில் நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று நம்புகிறோம். அமைச்சரவையின் முதல் நாளிலேயே இத்திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.
டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் களமிறங்கும் வேட்பாளர்கள் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக, காங்கிரஸ் கட்சி சார்பில் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications