நாய் பராமரிக்க ரூ.45ஆயிரம் சம்பளம்... டிகிரி படித்தவர்கள் தேவை - டெல்லி ஐஐடி விளம்பரம்
நாயைப் பராமரிக்கும் வேலைக்கு ரூ.45,000 சம்பளம் என்றும் டிகிரி படித்திருப்பது அவசியம் என்று டெல்லி ஐஐடி சர்ச்சை விளம்பரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
டெல்லி: நாய் பராமரிப்பு பணியாளர் வேலைக்கு பிஎஸ்சி, பி.டெக் உள்ளிட்ட டிகிரி படிப்புகள் கட்டாயம் என்று டெல்லி ஐஐடி சார்பில் வெளியிடப்பட்ட வேலை வாய்ப்பு விளம்பரம் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. நடந்தது என்ன என்று விளக்கம் அளித்துள்ளது டெல்லி ஐஐடி.
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம், கல்விசாரா பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாயைப் பராமரிக்கும் பணிக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பி.ஏ, பி.காம், பி.டெக் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாத ஊதியமாக 45,000 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இன்டர்வியூ செப்டம்பர் 5ஆம் தேதி என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டெல்லி ஐஐடியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு இளைஞர், இது பிடெக் படிப்பை ஏளனம் செய்கிறார்களா என்று கேட்டிருக்கிறார்.


ஒரு கல்வி நிறுவனமாக இருந்துகொண்டு, நாயைப் பராமரிக்கும் பணிக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது அவர்களின் கல்வியை ஏளனப்படுத்துவதாகும் என்று நெட்டிசன்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்த விளம்பரம் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள டெல்லி ஐஐடி, இந்த விளம்பரத்தில் கால்நடை அறிவியல் பட்டயப்படிப்பு தகுதியைத்தான் முன்வைத்ததாக தெரிவித்துள்ளது. பி.காம், பி.டெக் உள்ளிட்ட படிப்புகள்தான் தகுதியானவை என்பது தவறுதலாக வேறொரு விளம்பரத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும் தற்போது ஐஐடி தரப்பு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications