திடீரென காருக்குள் பாய்ந்த சிறுத்தை.. பெங்களூரில் சபாரி சென்ற 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!
பெங்களூர்: தொடர் விடுமுறையையொட்டி பெங்களூர் பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அப்போது திடீரென்று சபாரி காரை விரட்டி சென்ற சிறுத்தை ஜன்னல் வழியாக பாய்ந்து தாக்கியது. இதில் காருக்குள் இருந்த 12 வயது சிறுவனின் கைகளில் காயம் ஏற்பட்டது.
பெங்களூர் புறநகரில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சுதந்திர தினம், வீக்எண்ட் விடுப்பு என தொடர் விடுமுறையால் இந்த பூங்காவிற்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் சுதந்திர தினமான நேற்று முன்தினம் 12 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் பன்னரகட்டா உயிரியல் பூங்காவிற்கு வந்திருந்தான். அவன் தனது குடும்பத்தினருடன் பூங்காவில் சபாரி சென்றான்.
சபாரி காரில் 12 வயது சிறுவன் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருந்தான். அப்போது சாலையின் அருகே சிறுத்தை ஒன்று படுத்து கிடந்தது. இதையடுத்து டிரைவர் காரை நிறுத்தினார். காரில் இருந்தவர்கள் சிறுத்தையை பார்த்து ரசித்தனர். சில வினாடிகள் கழித்து டிரைவர் காரை முன்னோக்கி நகர்த்தினார்.
அப்போது திடீரென்று ஆக்ரோஷமான சிறுத்தை அந்த காரை விரட்ட தொடங்கியது. கார் மெதுவாக சென்றதால் சிறுத்தை காரின் ஜன்னல் வழியாக பாய்ந்தது. காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பயந்துபோய் கூச்சலிட்டனர். ஜன்னலில் தடுப்பு கம்பி இருந்ததால் சிறுத்தையால் காருக்குள் செல்ல முடியவில்லை. இருப்பினும் ஜன்னல் ஓரம் இருந்த 12 வயது சிறுவனின் கைகளில் சிறுத்தை தனது நகத்தால் தாக்கியது.
இதையடுத்து சுதாரித்த டிரைவர் காரை வேகமாக நகர்த்தி அங்கிருந்து சென்றார். காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் செயல் இயக்குநர் சூர்யா சென் கூறுகையில், ‛‛சபாரி சென்றபோது சிறுத்தையின் நகம் பட்டதில் சிறுவன் காயமடைந்தான். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் சபாரி செல்லும் வாகனங்களை விரட்டி அதன் மீது சிறுத்தைகள் ஏறுவது நடந்துள்ளது.
இந்த சம்பவத்தை அந்த காருக்கு பின்னால் சபாரி பஸ்சில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. வீடியோவில் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிறுத்தையை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தியதும், அதன்பிறகு புறப்படும்போது சிறுத்தை விரட்டி சென்று காரின் மீது ஜம்ப் செய்து சிறுவனின் கையை காயப்படுத்தியது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications