விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 797 பேருக்கு தொற்று உறுதி! வெளியான ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: ஏழரை மாதங்களுக்கு பிறகு நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 797ஆ அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு 'ஜேஎன் 1' எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதியதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்தான். ஆனால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு 8 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
ஆனால் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா என உலகின் 70-75 சதவிகித மக்கள் தொகையை கொண்டிருக்கும் வட அரைகோள பகுதியில் இது குளிர் காலம் என்பதால் தொற்று பாதிப்பு சுவாச கோளாறை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில், முககவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், அதிக அளவில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மேற்கொள்ளப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில், 225 நாட்களுக்கு பிறகு நேற்று மட்டும் 797 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு 4,50,10,986ஆக உயர்ந்துள்ளது. இதில், 98.81 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல உயிரிழப்பை பொறுத்த அளவில், கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிராவில் ஒருவர், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தலா ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜேஎன் 1 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications