பிபிசி நிறுவன டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு- ஊழியர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை
டெல்லி பிபிசி அலுவலகத்தி ஐடி அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
டெல்லி: பிபிசி சர்வதேச ஊடகத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி தொடர்பாக அத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும் பிபிசி அலுவலகங்களில் பணியாளர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் ஒன்று எரிந்து சாம்பலானது, இதில் ரயிலில் பயணித்த இந்து சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இதனைத் தொடர்ந்து கோத்ரா ரயில் எரிப்பை சம்பவத்தை முன்வைத்து குஜராத் மாநிலத்தில் மத மோதல்கள் வெடித்தன.
2002-ம் ஆண்டு குஜராத் மதமோதல்களில் 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த குஜராத் படுகொலைகள் உலக நாடுகளை உலுக்கியது. நாடு விடுதலைக்குப் பிந்தைய மிக மோசமான மதமோதலாக கருதப்பட்டது.
குஜராத் மதமோதல்களின் போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. இதனால் மோடிக்கு அமெரிக்கா அப்போது பயணத் தடை விதித்திருந்தது. மேலும் குஜராத் மதமோதல்களில் முதல்வராக இருந்த மோடிக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இந்த வழக்குகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பின்னணியில் பிபிசி சர்வதேச ஊடகமானது அண்மையில் 2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலைகளை முன்வைத்து ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப் படத்தில் முதல்வராக இருந்த மோடி குறித்தும் கேள்விகள் இடம்பெற்றிருந்தாக கூறி பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிபிசி ஊடகத்தின் இந்த ஆவணப்படத்தை டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வெளியிடக் கூடாது என வன்முறையிலும் ஒரு பிரிவினர் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பிபிசி ஊடகத்தின் குஜராத் படுகொலை தொடர்பான ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது. சமூக வலைதளங்களிலும் இந்த ஆவணப்படம் நீக்கப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு எதிரான அரசியல் கட்சிகள், இந்த ஆவணப் படத்தை பல மாநிலங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் இந்த ஆவணப்படம் முக்கியமானதாக் இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. பிபிசி ஆவணப்படம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். டெல்லி அலுவலகத்தில் பணியாளர்கள் அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்துவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.

மேலும் பிபிசி அலுவலகங்களில் பணியாளர்களின் லேப்டாப் உள்ளிட்டவற்றையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனராம். அத்துடன் பணியாளர்களை முன்கூட்டியே வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினராம்.
காங்கிரஸ் கண்டனம்

பிபிசி அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், முதலில் பிபிசி ஆவணப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது வருமான வரி ஆய்வு நடத்துகின்றனர். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதானி விவகாரத்தில் நாங்கள் விசாரணை கேட்டால் பிபிசி நிறுவனத்தை துரத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications