இந்த 4 விஷயங்களை செய்யுங்கள்.. நாடு தானாக முன்னேறும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வைத்த கோரிக்கை!
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்திய மக்களுக்கு 4 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்திய மக்களுக்கு 4 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளார்.
73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். இதன் பின் அவர் மக்கள் முன்னிலையில் சுதந்திர தின உரையாற்றினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அணிவகுப்பு இன்று நடக்க உள்ளது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்திய மக்களுக்கு 4 முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில், நாம் நன்றாக முன்னேறி வருகிறோம். பூமியில் மட்டுமல்ல விண்வெளி துறையில் நாம் சாதனை படைத்து வருகிறோம். சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
முதலில் என்ன
இந்த அருமையான நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் முதல் கோரிக்கை, மக்கள் இனி பிளாஸ்டிக் பேக்குகளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். அடுத்து மஹாத்மா காந்தி பிறந்த நாளுக்கு முன் நாம் பிளாஸ்டிக் இல்லாத தேசமாக மாற வேண்டும். துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவது என்ன
அதேபோல் இரண்டாவதாக மக்கள் இனி பொது இடங்களில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களை அசுத்தம் செய்யாமல் சுத்தம் பேணுவதை, மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும்.
மூன்றாவது என்ன
மூன்றாவதாக மக்கள் இனிமேல் மோசமான வேதியியல் உரங்களை பயன்படுத்த கூடாது. வேதியியல் உரங்கள் மண்ணை நாசம் செய்யும். அது நம் தாய் பூமியை மாசடைய செய்யும். மக்கள் அதற்கு பதிலாக இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்.
கடைசியாக என்ன
கடைசியாக மக்கள் இனிமேல் எல்லாம் குடும்பத்தோடு 15 சுற்றுலா தலங்களுக்காவது செல்ல வேண்டும். ஒரு வருடத்தில் எவ்வளவு சுற்றுலா செல்ல முடியுமோ அவ்வளவு செல்ல வேண்டும். இது மாநில வருவாயை அதிகரிக்க உதவும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.