இந்தியா முழுவதும் 13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி: 95 நாட்களில் செலுத்தி சாதனை
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி திட்டம்வேகம் பிடித்து வருகிறது.இந்தியா முழுவதும் 13 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
டெல்லி: இந்தியாவில் கடந்த 95 நாட்களில் 13 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரத்து 310 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று காலை 7 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டுமே நாட்டில் 29 லட்சத்து 90 ஆயிரத்து 197 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் புதிதாக 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3ஆம்தேதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 16ஆந்தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், முன் களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1ஆம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடன் போராடுகிறவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரம் நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடைபெற்றது. இதில் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மே 1ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும், தடுப்பூசி திட்டம்வேகம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சாதனை அளவாக 95 நாளில் 13 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டுள்ளன. உலக அளவில் மிக வேகமாக தடுப்பூசி போடப்படும் நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.
நேற்று காலை 7 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மட்டுமே நாட்டில் 29 லட்சத்து 90 ஆயிரத்து 197 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
13 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் போடுவதற்கு அமெரிக்காவுக்கு 101 நாள் ஆனது. சீனாவுக்கு 109 நாட்கள் பிடித்தது. இந்தியாவில் 95 நாளில் சரியாக 13 கோடியே 1 லட்சத்து 19 ஆயிரத்து 310 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 59.33 சதவீதம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களில் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.