எல்லையில் அதிரடி காட்டும் இந்தியா! சீனாவுக்கு செக்.. ராணுவ தளபதி அனுப்பிய மெசேஜ்!
டெல்லி: குளிர் காலத்தில் சீனாவுடனான எல்லைப் பகுதியில், இந்தியா தனது படைகளை குறைக்காது என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியிருக்கிறார். ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் எல்லை பிரச்சனை இருந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இந்தியா தரப்பில் இருந்து அதிக உயிரிழப்பு ஏற்பட்டிருந்தது. அப்போது முதல், இரு நாட்டு எல்லையில் அமைதியான சூழலை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா சொன்னது என்ன?:
ராணுவ தளபதி உபேந்திர திவேதி, “குளிர் காலத்தில் வடக்கில், சீன எல்லையில் இந்திய துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க நாங்கள் விரும்பவில்லை. அதேபோல இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கோடை காலத்தில் எவ்வளவு ராணுவ வீரர்களை எல்லையில் நிலைநிறுத்துவது என்பது குறித்து முடிவு மேற்கொள்ளப்படும்” என்று கூறியுள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. இருப்பினும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடந்த மோதலால் ஏற்பட்ட இழப்பு பெரியதாக இருந்தது. இதனையடுத்து முக்கிய புள்ளிகளுக்கு ரோந்து செல்வதை இரு தரப்பினரும் தவிர்த்து வந்தனர். ஆனால் தேவைக்கும் அதிகமாக ஏராளமான வீரர்கள் இந்த பகுதியில் குவித்து வைத்தனர்.
பதற்றமான வடக்கு எல்லை:
அளவுக்கு அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டதால், இருநாட்டு எல்லையிலும் பதற்றம் அதிகரித்தது. இப்படியே விட்டால் போர் மூளும் சூழல் கூட எழலாம் என்பதால், குவிக்கப்பட்ட வீரர்களை திரும்பப்பெற இரு நாடுகளும் முன்வந்தன. இதற்கான பேச்சுவார்த்தை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கியது. 4 ஆண்டுகளாக நீடித்த பேச்சுவார்த்தை ஒரு வழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது.
அதன்படி இரு நாட்டு ராணுவமும் பதற்றமான பகுதிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்ட வீரர்களை திரும்ப பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டன. இது குறித்துதான் தற்போது இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியிருக்கிறார். என்னதான் முடிவெடுக்கப்பட்டிருந்தாலும் குளிர்காலத்தில் நாங்கள் வீரர்களை திரும்ப பெற மாட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்தியா-சீனா உறவு:
கடந்த 1962ம் ஆண்டு போருக்கு பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய பகை எதுவும் எழவில்லை. கடந்த 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதல் விஷயத்தை கூட இரு நாடுகளும் உடனடியாக பேசி தீர்த்துக்கொள்ள முன்வந்திருந்தன. ஏனெினல் இரு நாடுகளிடையே மோதல் போக்கு தீவிரமடைந்தால் அது ஆசியாவின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கும். இன்றைய தேதியில் உலகின் மிகவும் வலிமையான பொருளாதாரம் கொண்ட முதல் 5 நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் இருக்கிறது.
இப்படி இருக்கும்போது போர் மோதலில் இறங்கினால் இந்த வளர்ச்சி அப்படியே பின்னோக்கி இழுக்கப்படும். எனவே, இரு நாடுகளும் போரை தவிர்த்து வருகின்றன. அதேநேரம் சொல்லிக்கொள்ளும்படியான நட்புறவிலும் இரு நாடுகளும் இல்லை. இந்தியாவில் சீனாவின் செயலிகள் முடக்கப்பட்ட விஷயம் பெரியதாக பேசப்பட்டிருந்தது. அமெரிக்க ஆதரவுடன் இந்தியா செயல்படுவதால் இப்படியான தடைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications