இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்
டெல்லி: லடாக் எல்லையில், இந்தியாவின் பதிலடி தாக்குதலில் சீனாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் 35 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில், சீன ராணுவத்துடன் நடைபெற்ற மோதலின்போது, இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். பெரிய கற்கள், கட்டைகளை வீசி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது.
இதுவரை, இரு தரப்பும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லையாம். ஆனால் அடிதடி, கல்வீச்சிலேயே இவ்வளவு தூரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்கா கவனிப்பு
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையை அமெரிக்கா தீவிரமாக கவனித்து வருகிறது. இது வரை சீன ராணுவம் மற்றும் சீன அரசு தங்கள் தரப்பில் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
35 சீன வீரர்கள் பலி
இந்த நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு சில முக்கிய தகவல்களை சேகரித்துள்ளன. இந்திய ராணுவ பதிலடியில் 35 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதில் சீன ராணுவத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவரும் பலியானதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் அமெரிக்க நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
வாய் மூடியிருக்கும் சீனா
இந்திய தரப்பு ஏற்கனவே வெளிப்படையாக 20 பேர் வீரமரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் சீன தரப்புதான் வாய்மூடி மவுனமாக இருந்து வருகிறது. இந்திய ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது என்று மட்டும் அது கூறியுள்ளது.
பறந்த ஹெலிகாப்டர்கள்
இந்த நிலையில், சீனா தரப்பிலிருந்து, பல ஹெலிகாப்டர்கள் மற்றும் ஸ்ட்ரக்சர்கள் எல்லைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், காயமடைந்த வீரர்களை எடுத்துச் சென்றதாகவும், ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. எனவே சீன தரப்பிலும் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சந்தேகங்கள்
சீன தரப்பில் பாதிப்பு அதிகம் என்பதால்தான், இதுவரை சீனா தங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கையை வெளியே தெரிவிக்காமல் இருப்பதாக சந்தேகங்கள் வலுத்து வந்தன. அமெரிக்க உளவு அமைப்பும், சீனாவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.